search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் இணைப்பு"

    • போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட செல்போன் இணைப்புகள் குறித்து தொலைத்தொடர்புத்துறை ஆய்வு நடத்தியது.
    • செல்போன் இணைப்புகளை 60 நாட்களுக்குள் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை தொலைத்தொடர்புத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    புதுடெல்லி:

    செல்போன் அழைப்புகள் மூலம் ஆன்லைன் மோசடிகள் மற்றும் இணையதள குற்றங்கள் நடப்பது அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட செல்போன் இணைப்புகள் குறித்து தொலைத்தொடர்புத்துறை ஆய்வு நடத்தியது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில், 6 லட்சத்து 80 ஆயிரம் செல்போன் இணைப்புகள் மோசடியாக பெறப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

    அதாவது, போலியான அடையாள ஆவணங்கள், முகவரி ஆவணங்கள், சுயவிவர ஆவணங்களை பயன்படுத்தி, இந்த செல்போன் எண்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால், அந்த செல்போன் இணைப்புகளை 60 நாட்களுக்குள் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை தொலைத்தொடர்புத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    அப்படி சரிபார்ப்பு நடவடிக்கையில் ஈடுபடாவிட்டால், அந்த செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று கூறியுள்ளது.

    • 28,200 செல்போன்களை சைபர் குற்றங்களை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 20 லட்சம் செல்போன் இணைப்புகளையும் உடனடியாக மறு ஆய்வு செய்து, அதில் போலியானவை என கண்டறியப்படும் இணைப்புகளை துண்டிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடி போன்ற சமூக விரோத செயல்களுக்கு தெலைத்தொடர்பு வசதிகளை தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

    எனவே இதற்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகமும், மாநில போலீசாரும் இணைந்து கூட்டு ஆய்வு நடவடிக்கைகளை நடத்தினர்.

    இதில் 28,200 செல்போன்களை சைபர் குற்றங்களை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தொலைத்தொடர்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த துறையினர் இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்ததில் இந்த செல்போன்கள் மூலம் 20 லட்சம் செல்போன் எண்களை பயன்படுத்தி மேற்படி குற்றங்கள் மற்றும் மோசடி அரங்கேறியது உறுதி செய்யப்பட்டது. இந்த எண்கள் மற்றும் செல்போன்கள் நாடு முழுவதும் பயன்பாட்டில் இருந்தவை ஆகும்.

    இதைத்தொடர்ந்து இந்த 28,200 செல்போன்களை உடனடியாக முடக்குமாறு தொலைத்தொடர்பு துறைக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

    மேலும் மேற்படி 20 லட்சம் செல்போன் இணைப்புகளையும் உடனடியாக மறு ஆய்வு செய்து, அதில் போலியானவை என கண்டறியப்படும் இணைப்புகளை துண்டிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    பொது பாதுகாப்பு, தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பின் உண்மைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உறுதி செய்யும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்பு துறை மற்றும் மாநில போலீசார் இணைந்து இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    குறிப்பாக மோசடி நபர்களின் நெட்வொர்க்கை கூண்டோடு அகற்றுவதையும், டிஜிட்டல் அச்சுறுத்தல்களில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×