என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடற்கரை ரெயில்"

    • ஒரு பாதையில் வட மாநில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • கூவம் ஆற்றின் கரையோரத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னையில் உள்ள தாம்பரம்-கடற்கரை ரெயில்வே வழித்தடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வழித்தடத்தில் ஓடும் மின்சார ரெயில்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த வழித்தடத்தில் எழும்பூர் முதல் சென்னை கடற்கரை வரை 3 ரெயில்வே பாதைகள் உள்ளன. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரெயில்களும், ஒரு பாதையில் வட மாநில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் சென்னை எழும்பூர்-கடற்கரை இடையே 4.3 கிலோ மீட்டர் நீளத்திற்கு 4-வது புதிய ரெயில் பாதை அமைக்க தெற்கு ரெயில்வே பரிந்துரை செய்தது. இந்த ரெயில் பாதையை ரூ.279 கோடி செலவில் அமைக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் எழும்பூரில் இருந்து கடற்கரை வரையிலான 4-வது ரெயில் பாதை அமைக்கும் பணி வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்படும் என தெற்கு ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

    இதேபோன்று வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையை ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை ஏழு சிறிய பாலங்கள் மற்றும் ஒரு பெரிய பாலத்தின் பணிகள் முடிவடைந்து, கூவம் ஆற்றின் கரையோரத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

    ரெயில் பாதையில் சிக்னல், தகவல் தொடர்பு சாதனங்கள் நிறுவவும், இவற்றுக்கான கட்டடங்கள் கட்டுவதற்கும் 12 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனையடுத்து தண்டவாளம் அமைக்கும் பணி தொடங்கி விரைவுபடுத்தப்படும் எனவும், வரும் ஆகஸ்ட் மாதம் இந்த பணிகள் நிறைவு பெறும் எனவும் தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு.
    • கடற்கரை மின்சார ரெயில் சேவையில் மாற்றம்.

    சென்னை:

    சென்னை ரெயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 8.25, 8.55, 10.20 மணிக்கும், திருவள்ளூருக்கு இரவு 7.50 மணிக்கும், கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.45 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று மற்றும் திங்கள்கிழமை (16-ந்தேதி) ரத்து செய்யப்படும்.

    கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை மற்றும் செவ்வாய்க்கிழமை (17-ந் தேதி) ரத்து செய்யப்படும்.

    மறுமாா்க்கமாக திருவள்ளூரில் இருந்து இரவு 9.35 மணிக்கும், கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 9.55 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் 16-ந் தேதி ரத்து செய்யப்படும்.

    மேலும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூருக்கு இரவு 8.05 மணிக்கு மேல் புறப்படும் ரெயில்கள் அனைத்தும் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும்.

    அதுபோல் கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 10.10, 10.40, 11.15 மணிக்கு வரும் ரெயில்கள் எழும்பூருடன் நிறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அவ்வப்போது மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
    • பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    சென்னை:

    சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் ரெயில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

    ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை கடற்கரை -தாம்பரம் இடையே இன்று காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின்சார ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பயணிகள் வசதிக்காக கடற்கரை-பல்லாவரம் இடையே 45 நிமிட இடைவெளியில் மட்டும் ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு பிறகுதான் வழக்கமாக ரெயில் சேவை ஞாயிறு கால அட்டவணை அடிப்படையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் வயதான முதியோர் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    இதுபற்றி சானடோரியம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ஆதங்கத்துடன் கூறியதாவது:-

    கடந்த சில மாதங்களாகவே தாம்பரம்-கடற்கரை ரெயில் மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.

    பராமரிப்பு பணிகளுக்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து இரவு-பகலாக சரி செய்ய வேண்டியது தெற்கு ரெயில்வேயின் பொறுப்பாகும். ஆனால் இதை தெற்கு ரெயில்வே கடைபிடிப்பதில்லை.

    பல மாதங்களாக பகல் நேரத்தில் ரெயில்களை ரத்து செய்கின்றனர். எத்தனை மாதத்துக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதை பொது மக்களுக்கு தெற்கு ரெயில்வே அறிவிக்க வேண்டும். இவர்கள் இஷ்டத்துக்கு ரெயில்களை ரத்து செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    எனவே பராமரிப்பு பணிகள் எவ்வளவு நடந்து உள்ளது? என்பதை மக்களுக்கு விளக்குவதுடன் இந்த பணிகள் இன்னும் எத்தனை மாதத்துக்கு நடைபெறும் என்பதையும் தெற்கு ரெயில்வே மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 12 பெட்டிகளை கொண்ட இந்த ‘குளுகுளு’ ரெயிலில் 1,320 இருக்கைகள் உள்ளன.
    • ரெயில் சேவை தொடங்கப்படும் போது கட்டண விவரங்கள் முழுமையாக அறிவிக்கப்படும்.

    சென்னை:

    சென்னை ஐ.சி.எப். ஆலையில் வந்தே பாரத் ரெயில்கள் மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரெயில் பெட்டிகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரெயில்வேயில் சென்னை கோட்டத்துக்கு 'குளுகுளு' வசதி கொண்ட 2 குளிர்சாதன மின்சார ரெயில்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த 'குளுகுளு' மின்சார ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்த 'குளுகுளு' மின்சார ரெயில் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் இன்னும் 2 வாரத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன் பிறகு இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் தொடங்கும். சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதும் அடுத்த மாதம் முதல் இந்த 'குளுகுளு' ரெயில் சென்னை பயணிகளுக்காக இயக்கப்படும்.

    இந்த ரெயில் ஒரு நாளைக்கு எத்தனை முறை இயக்கப்படும் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட உள்ளது. 12 பெட்டிகளை கொண்ட இந்த 'குளுகுளு' ரெயிலில் 1,320 இருக்கைகள் உள்ளன. ஒரே நேரத்தில் இந்த ரெயிலில் 5,700 பேர் பயணம் செய்வதற்கான இடவசதி உள்ளது.

    சென்னை கோட்டத்தில் முதல் கட்டமாக 2 'குளுகுளு' மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் வர இருக்கிற கோடை வெயிலில் இருந்து ரெயில் பயணிகள் தப்பிக்க முடியும்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே அடுத்த மாதம் 'குளுகுளு' மின்சார ரெயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரெயில் தயாரிப்புக்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ரெயிலில் நவீன மோட்டார்கள் இடம்பெற்றுள்ளதால் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் திறன் கொண்டது. இந்த ரெயில் பெட்டிகள் விரைவில் தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    சோதனை ஓட்டம் முடிவடைந்ததும் ரெயில் உடனடியாக இயக்கப்படும். எனவே வர இருக்கிற கோடை வெயிலை ரெயில் பயணிகள் எளிதாக சமாளிக்க முடியும். இந்த ரெயில் பயணத்துக்கான கட்டணம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

    மேற்கு ரெயில்வேயில் 'குளுகுளு' ரெயில்களுக்கு கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 9 கி.மீ. தூரத்துக்கு ரூ.35, 15 கி.மீ. தூரத்துக்கு ரூ.50, 24 கி.மீ. தூரத்துக்கு ரூ.70, 34 கி.மீ. தூரத்துக்கு ரூ.95 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி 'குளுகுளு' மின்சார ரெயிலில் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையேயான 28.6 கி.மீ. தூரத்துக்கான கட்டணம் ரூ.95 ஆக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த ரெயில் சேவை தொடங்கப்படும் போது கட்டண விவரங்கள் முழுமையாக அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×