என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்பு வாரியத் திருத்த மசோதா"

    • நீக்கப்பட்ட பகுதிகளை இணைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று உள்துறை மந்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
    • அறிக்கையில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளை நீக்கியதை உள்துறை மந்திரியே ஒத்துக்கொண்டுள்ளார்.

    புதுடெல்லி:

    தி.மு.க. எம்.பி. ஆ.ராசா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வக்வு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பாக இந்தியா முழுவதும் பயணித்த பாராளுமன்ற கூட்டுக்குழு இறுதியாக கடந்த மாதம் பாட்னா, கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய 3 நகரங்களிலும் கருத்துகளை கேட்டது. அதனை கூட்டுக்குழுவின் தலைவரிடம் சமர்ப்பிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் வழங்கப்பட்ட கால அவகாசம் முடியும் முன்பே பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் கருத்துகளை கேட்காமல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதில் சட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை.

    பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய எதிர் கருத்துகளை குழுத்தலைவர் நீக்கியுள்ளது குறித்து சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது அரசு சார்பில் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து 150-க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் குரல் எழுப்பினோம்.

    இந்த நிலையில், நீக்கப்பட்ட பகுதிகளை இணைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று உள்துறை மந்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் கருத்துகள் நீக்கப்படவில்லை என மாநிலங்களவையில் பாராளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி பேசியிருக்கிறார். இந்த முரண்பாடுகள் மத்திய அரசின் செயல்பாட்டை பிரதிபலிக்கிறது.

    அறிக்கையில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளை நீக்கியதை உள்துறை மந்திரியே ஒத்துக்கொண்டுள்ளார். அப்படியானால் நீக்க உத்தரவிட்டது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த மசோதா, பாராளுமன்றத்தில் மசோதா விவாதத்துக்கு வரும்போது கடுமையாக எதிர்ப்போம். மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம். அதன் மூலம் மசோதாவை தடுத்து நிறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் பரிந்துரை செய்த 14 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
    • மார்ச் 10-ந்தேதி வக்பு திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    வக்பு வாரியங்களுக்கு சொந்தமாக நாடு முழுவதும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்குப்படி, வக்பு வாரியங்களுக்கு 9.4 லட்சம் ஏக்கர் அளவுக்கு சொத்துக்கள் இருப்பது தெரிய வந்தது.

    குறிப்பாக, நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் சொத்துக்கள் வக்பு வாரியங்கள் பெயரில் இருப்பது தெரிய வந்தது.

    வக்பு வாரிய சொத்துகளை முறைப்படுத்தும் வகையில் வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத 2 நபா்களை உறுப்பினா்களாக இடம்பெற செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டாய பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுடன் வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது.

    எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பால் பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது.

    வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும், பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டுக்குழு ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    அந்த குழு பல்வேறு கட்டங்களாக கூடி ஆய்வு செய்தது. அப்போது 66 திருத்தங்கள் முன்மொழியப்பட்டன. இதில், எதிர்க்கட்சிகளின் 44 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.

    ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் பரிந்துரை செய்த 14 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வக்பு மசோதா கூட்டுக்குழு அறிக்கை ஆராயப்பட்டு, 14 திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், மார்ச் 10-ந்தேதி தொடங்கவுள்ள பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வில், வக்பு திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×