என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்.ஐ.ஏ. அதிகாரிகள்"

    • போலி ஆவணங்களை ஆள் கடத்தல் கும்பல் தயாரித்திருப்பதும் அம்பலம்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை.

    சென்னை:

    இலங்கையில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு 13 இலங்கை தமிழர்கள் சட்ட விரோதமாக கர்நாடக மாநிலம் மங்களூரில் புகுந்தது தெரிய வந்தது.

    இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழக பகுதிக்கு வந்து பின்னர் பஸ், ரெயில், கார், மோட்டார் சைக்கிள் மூலமாக இவர்கள் மங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டதை அம்மாநில போலீசார் கண்டு பிடித்தனர்.

    இதை தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்த சீனிஆபுல்கான் என்பவர் உள்பட சிலர் அனுப்பி வைத்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து மங்களூர் போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். இவர்களில் 3 பேர் தலை மறைவானார்கள்.

    மங்களூர் போலீசார் நடத்தி வந்த இந்த வழக்கின் விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சட்ட விரோதமாக இலங்கை தமிழர்களை கடத்திச் சென்றதாக குற்றம்சாட்டி புதிய வழக்கை பதிவு செய்திருந்தார்கள்.

    இதுபற்றி அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில் ஆள் கடத்தலின் பின்னணி பற்றி பரபரப்பான தகவல்கள் கிடைத்தன. இலங்கையில் இருந்து 38 தமிழர்களை கனடாவில் குடியேற வைப்பதற்காக போலி ஆவணங்களை ஆள் கடத்தல் கும்பல் தயாரித்திருப்பதும் அம்பலமானது.

    இதை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக 10 பேர் மீதும் கோர்ட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த 3 பேரில் சீனி ஆபுல்கான் என்கிற விடுதலைப் புலிகளின் நெருங்கிய ஆதரவாளர் ராமநாதபுரத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.

    அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • திருப்பூர் மாவட்ட போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    • அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

    கோவை:

    அண்டை நாடான வங்காளதேசத்தில், இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிகளவு பனியன் தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அங்கு ஏற்பட்ட சூழ்நிலை மாற்றம், அரசியல் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பனியன் தொழில் முடங்கியது. இதனால் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்தனர்.

    இதன் காரணமாக வங்காளதேசத்தினர், மேற்குவங்கம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி, போலி ஆதார் அட்டைகளை தயாரித்து தமிழகத்திற்குள் வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் நுழைந்துள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

    உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் மாநகர மற்றும் மாவட்ட போலீசார், கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில நாட்களாகவே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வடமாநில வாலிபர்கள் போர்வையில் தங்கி வேலை பார்த்து வந்த வங்க தேசத்தினர் 31 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த சோதனையில் 8 வங்கதேசத்தினர் பிடிபட்டனர்.

    கடந்த வாரத்தில் மட்டும் 39 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இன்னும் பலர் போலி ஆதார் அட்டைகள் தயாரித்து வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் திருப்பூர் மற்றும் கோவையில் தங்கியிருப்பதாக கூறியுள்ளனர்.

    இதையடுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பனியன் நிறுவனங்கள், வடமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    வடமாநில தொழிலாளர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது தெரிந்தால் அவர்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வரும் வெளிமாநில தொழிலாளர்களின் ஆவணங்களை வாங்கி சரிபார்க்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மாநகரில் 24 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. வாகனங்களில் வருபவர்களிடம் முறையான ஆவணங்கள் உள்ளதா? எதற்காக திருப்பூர் வருகின்றனர்? உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்துகின்றனர்.முறையான ஆவணங்கள் வைத்துள்ளவர்களை தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கின்றனர்.

    இதேபோல் மாவட்ட முழுவதும் உள்ள சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அந்த வழியாக வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில், வங்கதேசத்தின் ஊடுருவல் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரிக்கின்றனர். அவர்கள் கோவை மற்றும் திருப்பூரில் முகாமிட்டு, பனியன் நிறுவனங்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று வங்கதேசத்தினர் தங்கியுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை மாவட்டத்திலும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளதால், இங்கும் வங்கதேசத்தினர் வந்து இருக்கலாம் என்பதால் தொழில் நிறுவனங்களில் சோதனை செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து கோவை கமிஷனர் சரவண சுந்தர் கூறியதாவது:-

    கோவை மாநகரை பொறுத்தவரை சட்டவிரோதமாக யாராவது தங்கியுள்ளார்களா என்பது குறித்து தொடர் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    ஏற்கனவே தொழிலாளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அதில் உள்ள முகவரிகளிலும் விசாரிக்கப்பட்டது. அதில் உண்மையான விவரங்களே இருந்தன.

    இருப்பினும் தொடர் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் முழு விவரங்களை சேகரித்து அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விசாரணை நடத்துவதற்காக தெலுங்கானாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    ஆலந்தூர்:

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஜக்ரியா. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பில் இணைந்து செயல்பட்டு வரும் இவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    தெலுங்கானா போலீசாரும், அம்மாநிலத்தில் இயங்கி வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் ஜக்ரியாவை கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் ஜக்ரியா வெளிமாநிலத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வருவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது ஜக்ரியா அதிகாரிகள் பிடியில் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெலுங்கானாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவரது பின்னணி தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஜக்ரியாவின் பாகிஸ்தான் பின்னணி தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×