என் மலர்
நீங்கள் தேடியது "Social activist murdered"
- திருவண்ணாமலை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
- சமூக ஆர்வலர் கொலை வழக்கில் நடவடிக்கை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் கடந்த 2012-ம் ஆண்டு சமூக ஆர்வலர் திருவண்ணாமலையில் மனித உரிமை மீறல் மற்றும் நில அபகரிப்பு வழக்குகளில் பல்வேறு போலீஸ் அதிகாரிகள் மற்றும் நில மாபியாக்களுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் ராஜ்மோகன்சந்திரா இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந் தேதி செங்கம் சாலையில் அமைந்துள்ள சிங்கமுக தீர்த்தம் அருகில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முன்விரோதம் காரணமாக திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் திருப்பதி பாலாஜி என்ற வெங்கடேசன் (வயது 45) தரப்பினர் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து திருப்பதி பாலாஜி, அவரது தந்தை காசி என்ற வீராசாமி, அண்ணன் செல்வம், செல்வத்தின் மனைவி மீனாட்சி (41), திருவண்ணாமலை வடஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் (32), தென்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (39), ஆணாய்பிறந்தான் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (42), விஜயராஜ் (41), வடஆண்டாப்பட்டு பகுதியை சேர்ந்த சடையன் (40), போளூர் தாலுகா செங்குணம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (50) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு நடைபெற்று வந்த சமயத்தில் திருப்பதி பாலாஜியின் அண்ணன் செல்வமும், தந்தை காசி என்ற வீராசாமியும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டு நீதிபதி (பொறுப்பு) இருசன்பூங்குழலி தீர்ப்பு அளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட திருப்பதி பாலாஜி என்ற வெங்கடேசன், மீனாட்சி, முருகன், சந்திரசேகர், அய்யப்பன், விஜயராஜ், சடையன், சுப்பிரமணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். சமூக ஆர்வலர்கள் கொலை வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஜகபர் அலி சமூக சேவகராக மக்கள் முன்பு விசுவரூபம் எடுத்தார்.
- அதிகாரிகள் தவறை தடுக்க முன்வரவில்லை.
ஜகபர் அலியின் கொலை இதை தான் சமூகத்துக்கு சொல்கிறது. ஏனெனில் தவறுகள் நடப்பது கண்ணுக்கு தெரிந்தால் தட்டிக் கேட்கவும், சுட்டிக் காட்டவும் பொதுமக்கள் முன் வர வேண்டும் என்றுதான் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.
அப்படி செய்தால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதற்கு ஏற்கனவே சில சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளது. அந்த வரிசையில் இப்போது ஜகபர் அலியும் கொல்லப்பட்டுள்ளார்.
ஜகபர் அலியின் சொந்த ஊர் புதுக்கோட்டை அருகே உள்ள வெங்களூர். இவருக்கு 2 மனைவிகள், முதல் மனைவி புதுக்கோட்டையில் இருக்கிறார். 2-வது மனைவி மரியம் காரைக்குடியில் இருக்கிறார்.
ஜகபர் அலி காரைக்குடிக்கு அடிக்கடி சென்று வருவார். ஜகபர் அலி கொலை வழக்கில் சிக்கி இருக்கும் ராசுவின் கல்குவாரியில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மேலாளராக பணியாற்றி இருக்கிறார்.
ராசுவும், தேடப்படும் ராமையாவும் ஜகபர் அலிக்கு நெருக்கமானவர்களாகத்தான் இருந்துள்ளார்கள். ஆனால் அந்த கல்குவாரியில் நடந்து வந்த தில்லாலங்கடி வேலைகளை ஜகபர் அலியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முறைகேடான நிறுவனத்தில் வேலை பார்ப்பது முறையல்ல என்று தான் வேலையை உதறிவிட்டு வெளியேறி இருக்கிறார்.
அதன் பிறகுதான் கல்குவாரியில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பணியிலும், சட்டப்படி அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் துணிந்து ஈடுபட்டுள்ளார்.
அவரது முதல் போராட்டம் மெய்ப்புரம், லட்சுமிபுரம் கிராம மக்களை பாதுகாத்த போராட்டம். அந்த கிராமங்களில் கல்குவாரிகள் அனுமதி இல்லாமல் இயங்கி வருவதும் அதனால் மக்கள் படும் வேதனைகளையும் அறிந்து அந்த பகுதி மக்களை திரட்டி கல்குவாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி இருக்கிறார். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அந்த குவாரிகளை மூட வைத்தார்.
இதனால் ஜகபர் அலி சமூக சேவகராக மக்கள் முன்பு விசுவரூபம் எடுத்தார். தான் வேலை பார்த்த இடத்தில் நடக்கும் தவறுகளை கண்கூடாக பார்த்ததால் ராசுவின் கல்குவாரி முறைகேடுகளை அம்பலப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் 2023-ல் அனுமதி முடிவடைந்த பிறகும் குவாரி இயங்கி வந்ததால் சட்டப்படி அதை மூட நடவடிக்கை எடுத்து உள்ளார்.
70 ஆயிரம் லாரி அளவுக்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வேறொரு இடத்தில் மலை போல் குவித்து வைத்திருந்ததை ஆதாரத்துடன் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார்.
அதிகாரிகள் தவறை தடுக்க முன்வரவில்லை. அதற்கு பதிலாக அவரது புகார் பற்றி கல்குவாரி உரிமையாளர்களுக்கு தகவலை கசிய விட்டு உள்ளார்கள்.
தாசில்தாரிடம் நேரடியாக முறையிட்ட ஜகபர் அலியிடம் அவர் இன்னும் ஒரு வாரம் பொறுத்து இருங்கள் என்று கூறி இருக்கிறார். அப்படி காலதாமதம் செய்தால் பதுக்கி வைத்திருக்கும் கனிம வளங்களை அப்புறப்படுத்தி விடுவார்கள் என்பதை ஜகபர் அலி எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
அதிகாரிகளிடம் நியாயம் கிடைக்காது என்பதால் ஜனவரி 17-ந்தேதி மக்களை திரட்டி போராடுவேன் என்று எச்சரித்து இருக்கிறார்.
இதற்கிடையில் ஜகபர் அலி குவாரிகளுக்கு எதிராக தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வர இருந்ததால் குவாரி உரிமையாளர்களுக்கு நெருக்கடி முற்றி இருக்கிறது. நேரடியாகவே ஜகபர் அலியின் வீட்டுக்கு சென்று மிரட்டி இருக்கிறார்கள்.
எங்களுக்கு எதிராக செயல்பட்டால் நடப்பதே வேறு... என்று மிரட்டி சென்றுள்ளார்கள்.
சொன்னபடியே ஜகபர் அலி போராட்டம் நடத்த இருந்த அதே ஜனவரி 17-ந் தேதியே அவரது உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் மிகவும் கோரமான முறையில்.
லாரி உரிமையாளர் முருகானந்தம் போலீசில் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில், 'அவர் மசூதியில் இருந்து திரும்பி வரும் வழியில் திட்டமிட்டபடி மினி லாரியை மோத செய்தேன். முதல் முறை மோதிய போது படுகாயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.
இதனால் ஒருவேளை உயிர் பிழைத்து விடுவார் என நான் 2-வது முறை மீண்டும் மோதி அவரை கொலை செய்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த சகதியில் கிடந்த ஜகபர் அலியின் உடலை பார்த்தும் போலீசுக்கு எந்தவிதமான சந்தேகமும் ஏற்பட வில்லையாம்.
சாலை விபத்து என்றே முதலில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஜகபர் அலியின் மனைவி மரியம் புகார் கொடுத்த பிறகே கொலை வழக்காக மாற்றப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்தது பற்றி ஜகபர் அலியின் மனைவி மரியம் புகார் செய்துள்ளார். அப்போதே போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் ஜகபர் அலி காப்பாற்றப்பட்டிருப்பார்.
ஜகபர் அலி கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால் கொலை சம்பவம் அரங்கேறி இருக்காது.
ஊருக்காக போராடினால் இதுதான் கதியா? என்று கண்ணீர் மல்க கேட்கும் ஜகபர் அலியின் மனைவி மரியத்தின் கேள்விக்கு என்ன பதில்?
- புகாருக்குள்ளான 2 கல் குவாரிகளில் விசாரணை நடத்தினர்.
- திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58) அதிமுக பிரமுகரும் சமூக ஆர்வலருமான இவர் திருமயம் துளையானூர் பகுதியில் இயங்கும் கல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்தினார்.
மேலும் சட்டவிரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் அளித்ததோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி ஜகபர் அலி மசூதிக்கு சென்று திரும்பிய போது மினி லாரி ஏற்றி படுகொலை செய்யப் பட்டார் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலையை கண்டித்து அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராசு ,ராமையா ஆகிய 2 கல் குவாரி அதிபர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர் பின்னர் அரசியல் அழுத்தம் காரணமாக வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது.
நேற்று இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஜகபர் அலியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஜகபர் அலிக்கு மிரட்டல் விடுத்து வந்தவர்கள் தொடர்பாக அவரது 2-வது மனைவியிடம் விசாரித்தனர். அதன் மூலம் கொலையின் பின்னணியில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என விசாரித்தனர்.
அதன் பின்னர் இன்று கொலை நடந்த இடம் மற்றும் புகாருக்குள்ளான 2 கல் குவாரிகளில் விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஜகபர் அலி கொலை சம்பவத்தில் கவனக்குறைவாக இருந்ததாக திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் பிறப்பித்து உள்ளார்.
- லாரி உரிமையாளர் முருகானந்தத்தின் வீடு மற்றும் கடைகளிலும் சோதனை நடந்தது.
- காவலில் எடுக்கப்பட்ட 5 பேர் இன்று கோர்ட்டில் ஆஜர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜகபர் அலி( வயது 58) அ.தி.மு.க. பிரமுகரும் சமூக ஆர்வலருமான இவர், திருமயம் பகுதியில் கல் குவாரிகளில் நடைபெறும் சட்டவிரோத கனிமவள கொள்ளையை தடுப்பதற்காக போராடி வந்தார்.
மேலும் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கடந்த 17-ம் தேதி அவரை லாரி ஏற்றி கொலை செய்தனர்.
இதுதொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர்கள், ராசு ராமையா, ராசுவின் மகன் தினேஷ், லாரி உரிமையாளர் முருகானந்தம், டிரைவர் காசிநாதன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைதான 5 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, அவர்களை இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர்.
இதற்கிடையே ஜகபர் அலியின் மனைவி மரியம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், சில தினங்களுக்கு முன்பு ஜகபர் அலியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு தாசில்தார் முன்னிலையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று சிபிசிஐடி போலீசார் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் கைதான ராமையா மற்றும் ராசு ஆகியோருக்கு சொந்தமான துளையானூரில் உள்ள அவர்களுக்கு சொந்தமான கல் குவாரிகள், வீடுகள் மற்றும் திருமயத்தில் உள்ள ராசுவுக்கு சொந்தமான நகை அடமானக் கடை ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் திருமயத்தில் உள்ள லாரி உரிமையாளர் முருகானந்தத்தின் வீடு மற்றும் கடைகளிலும் சோதனை நடந்தது.
இதில் குவாரிகள் மற்றும் அவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கனிமவள முறைகேடு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணையை தீவிர படுத்த முடிவு செய்துள்ளனர்.