என் மலர்
நீங்கள் தேடியது "tag 162808"
- குருமூர்த்திக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
- தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள காமராஜர்நகரை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 32). கூலிதொழிலாளி. காதல் திருமணம் செய்த இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
குருமூர்த்திக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அவர் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு தாளமுத்துநகர் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் படுத்து உறங்கினர்.
- பெண்களுக்கு கழிவறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் என்.டி.பி.எல். அனல்மின் நிலையம் உள்ளது.
என்.டி.பி.எல். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதை போல சம்பளம் வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தரமான குடிநீர் வசதி, கேண்டீன் வசதி, உணவு அருந்தும் அறை,
பெண்களுக்கு பணியிடத்தின் அருகே கழிவறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் நேற்று அனல்மின் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு சங்க செயலாளர் அப்பாத்துரை தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சுமுத்து முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேற்று இரவு தூத்துக்குடி அனல்மின் நிலையம் முன்பு சாலையில் படுத்து உறங்கினர். இந்நிலையில் என்.டி.பி.எல். அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- முதல் தளத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
- ரூ.6 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதிய பஸ்நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. நேற்று இரவு அங்குள்ள வியாபாரிகள் வழக்கம்போல் கடைகளை அடைத்து வீடுகளுக்கு சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை வணிக வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. தொடர்ந்து அருகே உள்ள மேலும் 7 கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் வடபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு போலீசார் உடனடியாக விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடைகளில் இருந்த பணம் மற்றும் விலை உயர்ந்த காமிராக்கள் என ரூ.6 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி அதில் பதிவான உருவங்களை கொண்டு, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
- குரூஸ் பர்னாந்துக்கு நகரின் மத்திய பகுதியில் மணிமண்டபம் அமைத்து கவுரவப்படுத்த வேண்டும் .
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர தந்தை என்று அழைக்கப்படுபவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து. இவருக்கு தூத்துக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடற்கரை சாலையில் உள்ள ரோச் பூங்கா பகுதியில் மணிமண்டபம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால் நகரின் மையப்பகுதியில் அமைக்காமல் இங்கு அமைப்பதற்கு மீனவமக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக குருஸ் பர்னாந்து நற்பணிமன்ற தலைவர் ஹெர்மன் கில்டு கூறியதாவது:-
தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் கொண்டு வந்த குரூஸ் பர்னாந்துக்கு நகரின் ஒதுக்குப்புறத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு மீனவ மக்களின் மனதை வேதனைப்படுத்தி உள்ளது. அனைத்து சமுதாய மக்களுக்கும் தொண்டு ஆற்றிய அவருக்கு நகரின் மத்திய பகுதியில் மணிமண்டபம் அமைத்து கவுரவப்படுத்த வேண்டும் . இல்லை என்றால் கடற்கரை பகுதி மீனவமக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றம் சார்பில் அனைத்து மீனவ அமைப்புகளுடன் ஆலோசனை தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் குரூஸ் பர்னாந்து நற்பணி மன்ற எட்வின் பாண்டியன், தலைவர் ஹெர்மன் கில்டு, செயலாளர் சசிக்குமார், பொருளாளர் டெரன்ஸ், வளன் ஆண்ட்ரூஸ், லூர்துசாமி, ராஜ், அலாய், அமலநாதன், கென்னடி, சாக், ஜெபி, பரதநலச் சங்கம் பொதுக் செயலாளர் கனகராஜ், இக்னேஷியஸ், ரூஸ்வால்ட், ராஜேந்திரன், முன்னாள் துணை மேயர் சேவியர், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் அகஸ்டின், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கட்டுமான பொருட்களை ஏற்றிக் கொண்டு எஸ்தர் ராஜாத்தி என்ற தோணி ஒன்று மாலத்தீவுக்கு சென்றது.
- அதிக காற்று வீசியதால் தோணி கவிழ்ந்து 7 பேரும் நீரில் மூழ்கினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து கடந்த 28-ந்தேதி கட்டுமான பொருட்களை ஏற்றிக் கொண்டு எஸ்தர் ராஜாத்தி என்ற தோணி ஒன்று மாலத்தீவுக்கு சென்றது.
அதில் தூத்துக்குடி தருவை மைதானம் அருகே உள்ள லைன்ஸ்டவுன் 6-வது தெருவை சேர்ந்த ஸ்டான்லி சாக்ரியாஸ் (வயது 59), சகாய கிளிப்பட் ஜான் பெக்மான்ஸ், தொன்மை ஜேசு, ஆண்டன் ராஜேந்திரன், மில்டன் தாசன் பெர்ணான்டோ, ஆண்டன் வாஸ்டின் பெர்ணான்டோ, லிங்கராஜ் முனியசாமி ஆகிய 7 பேர் பயணம் செய்தனர். மாலத்தீவுக்கு அருகே சென்றபோது அதிக காற்று வீசியதால் தோணி கவிழ்ந்ததில் பயணம் செய்த 7 பேரும் நீரில் மூழ்கினர்.
இதில் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி சாக்ரியாஸ் மட்டும் உயிரிழந்தார். அவரது உடலை கடலோர காவல் படையினர் மீட்டு மாலத்தீவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மீட்கப்பட்ட 6 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி வந்தனர்.
இந்நிலையில் கடலில் மூழ்கி பலியான ஸ்டான்லி சாக்ரியாஸ் உடல் மாலத்தீவில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அங்கிருந்து வானம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு பிரேத பரிசோதனை நடைபெற்றது. இன்று அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பெருமாள் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- மோசஸ் என்பவர் பெருமாளை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தருவைகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது70). இவர் சக்கம்மாள்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணி முடிந்து பெருமாள் தனது சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அவர் தூத்துக்குடி-விளாத்திகுளம் சாலையில் சென்ற போது பின்னால் வந்த கார் அவர் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். காரில் வந்த விளாத்திகுளம் வில்வமரத்துப்பட்டியை சேர்ந்த மோசஸ் (22) என்பவர் உடனடியாக பெருமாளை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மத்திய அரசு நிதியுதவியுடன் கூடிய தேசிய கால்நடை இயக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- செம்மறியாடுகள் இனவிருத்திக்காக தொழில் முனைவோரை உருவாக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தொழில் முனைவோர் மத்திய அரசு நிதியுதவியுடன் கூடிய தேசிய கால்நடை இயக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தொழில் முனைவோரை உருவாக்கு வதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் சேர்ந்து தொழில் முனைவோராக விரும்புவோர் தனிநபர், சுய உதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை தொழில் முனைவோராக உருவாக்க மானியம் வழங்கப்படும்.
மானியம் கிராமப்புற கோழிகள் இன மேம்பாட்டுக்கு தொழில் முனைவோரை உருவாக்க 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 லட்சம் மானியம், வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் இனவிருத்திக்காக தொழில் முனைவோரை உருவாக்க 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.50 லட்சம் மானியம், பன்றி வளர்ப்பில் தொழில் முனைவோரை உருவாக்க 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.30 லட்சம் மானியமாகவும், தீவன உற்பத்தியை பெருக்கவும், சேமிப்பு பிரிவு அமைக்கவும் 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.50 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விருப்பம் உள்ள பயனாளிகள் பொதுத்துறை வங்கிகள் மூலமாகவோ அல்லது சுயநிதி நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்று திட்டத்தை செயல்படுத்தலாம். உரிய ஆவணங்கள் மற்றும் விரிவான திட்ட அறிக்கைகளுடன் உதயமித்ரா போர்ட்டலில் பதிவேற்றம் செய்யலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தசரா நிகழ்ச்சியில் நிறைவு நாளான நேற்று சூரசம்ஹார விழா நடைபெற்றது.
- சிறப்பு பூஜையில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெப்பகுளம் மாரியம்மன் கோவில், முத்தாரம்மன் கோவில், கிராமதேவதை மேலூர் பத்திரகாளியம்மன் ஆகிய கோவில்களில் தசரா திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அலங்கார தீபாதாரனைகள் நடைபெற்றது.
தசரா நிகழ்ச்சியில் நிறைவு நாளான நேற்று சூரசம்ஹார விழா நடைபெற்றது. இக்விகோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
விழாவில் மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், வட்ட செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், கங்காராஜேஷ், முத்தாரம்மன் கோவில் தலைவர் சோமநாதன், செயலாளரும் மாவட்ட தி.மு.க. பிரதிநிதியுமான சக்திவேல், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி, செந்தில்குமார், முன்னாள் அறங்காவலர்குழு உறுப்பினர் அறிவழகன், மற்றும் நிர்வாகிகள் முத்துக்குமார், ரமேஷ், ஜோதிசங்கர், கணேசன், மாரிமுத்து, சிவன் கோவில் பிரதோசகமிட்டி நிர்வாகி ஆறுமுகம் உள்பட கோவில் நிர்வாகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அமைச்சர் கீதாஜீவன் சென்னை சென்றார். அங்கு அமைச்சர் கீதாஜீவன், வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட புதிய நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், கட்சி ரீதியான நிர்வாகிகளுடன் அறிவாலயத்தில் முதல்-அமைச்சரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
- ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் தசரா பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஸ்டெர்லைட் நிறுவன முதன்மை செயலர் சுமதி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
உடன்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பக்தர்களுக்கு 50 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஸ்டெர்லைட் நிறுவன முதன்மை செயலர் சுமதி தலைமை தாங்கினார். நிறுவன பொதுமேலாளர்கள் சக்திவேல், சுந்தர்ராஜ், சமூக நலப்பணித் தலைவர் சுந்தர்ராஜ், உதவி மேலாளர் ஜெயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தசரா திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 50 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதில் நிறுவன பணியாளர்கள் தியாகராஜன், சோமசுந்தரம், பாலசுப்பிரமணியன், ஜிந்தா, சுடலை, அருண்ராம்தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்பிக் நிறுவனத்திடம் மழைக்காலத்திற்கு முன் வாய்க்கால்களை தூர்வாரி தருமாறு விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
- தூர்வாரும் பணிகள் தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி, முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்தி மரப்பட்டி விவசாய சங்கத்தினர் ஸ்பிக் நிறுவனத்திடம் மழைக்காலத்திற்கு முன் விவசாய வாய்க்களை தூர்வாரி தருமாறு கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக வாய்க்காலை தூர்வாரி தருவதற்கு ஸ்பிக் நிறுவனத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஸ்பிக் நிறுவன துணைத் தலைவர் கோபால கிருஷ்ணன் உத்தரவின் பேரில்,ஜே.சி.பி. எந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் தொடங்கியது.இந்த நிகழ்ச்சியில் ஸ்பிக் நிறுவன நிர்வாக முதுநிலை மேலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் மக்கள் தொடர்பு துணை மேலாளர் அம்ரிதா கவுரி, மக்கள் தொடர்பு அலுவலர் குணசேகர், விவசாய சங்கத்தின் சார்பில் முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாய சங்கத் தலைவர் திருமால், செயலாளர் ரகுபதி என்ற சின்னராஜா, கிருபானந்தம் மற்றும் உப்பாற்று ஓடை ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பணிகள் தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதன்மூலம் மழைக்காலத்தில் விவசாய விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படுவது குறையும், மழைநீர் தேங்கி நிற்பதும் தடுக்கப்படும் என்று விவசாயிகள் கூறினர். மேலும் ஸ்பிக் நிறுவனத்திற்கு விவசாயிகள் சங்கத்தினரும், பொது மக்களும் பாராட்டு தெரிவித்தனர்.
- தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் 40-வது ஆண்டு ரூபி ஜூபிளி விழாவுக்கு டி.ஆர்.தமிழரசு தலைமை தாங்கினார்.
- விழாவில் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் 40-வது ஆண்டு ரூபி ஜூபிளி விழா தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நேற்று நடந்தது. விழாவுக்கு சங்க தலைவர் டி.ஆர்.தமிழரசு தலைமை தாங்கினார். விழாக்குழு தலைவர் ஜோபிரகாஷ் வரவேற்று பேசினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கம் உருவாவதற்கு காரணமானவர்களை கவுரவித்தார். தொடர்ந்து சங்கத்தின் 40 ஆண்டுகால நிகழ்வுகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். சாதனை படைத்த தொழில் அதிபர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.
தபால்தலை வெளியீடு
விழாவில் ரூபி ஜூபிளி விழா சிறப்பு தபால்தலை மற்றும் தபால் உறையை மதுரை மண்டல தபால்துறை தலைவர் ஜெயசங்கர் வெளியிட, கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
ஒரு நிறுவனத்தை 40 ஆண்டுகளாக நடத்துவது சவாலான ஒன்று. பல நிறுவன தலைவர்கள் ஒன்றாக இணைந்து தூத்துக்குடியின் தொழில் வளர்ச்சிக்காக உங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறீர்கள். தூத்துக்குடியில் ஒவ்வொரு இளைஞருக்கும், தான் ஒரு தொழில் முனைவோராக வரவேண்டும் என்ற கனவு உள்ளது. இன்றைய இளைஞர்கள் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் சாத்தியங்கள் உள்ளன. ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருகாலத்தில் மிகவும் சாதாரணமாக இருந்த மாவட்டத்தில், நம் முன்னோர்கள், முன்னோடிகள் மிக தைரியமாக தொழில் முதலீடுகளை செய்து உள்ளனர். அவர்களின் உழைப்பு காரணமாக தூத்துக்குடியை தொழில் முதலீட்டாளர்கள் திரும்பி பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.
விடாமுயற்சி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும், தொழில் முதலீடுகள் உருவாக வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். இதனால் தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. டைடல் பார்க் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் பல தொழில்கள் இங்கு வர வேண்டும்.
தொழில் முனைவோர்கள் இந்த பகுதியில் உருவாக வேண்டும் என்பது நம் அத்தனை பேரின் கனவாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொழில் துறை மிகப்பெரிய சவால்களை சந்தித்து உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனா தொற்று போன்றவற்றை தாண்டி வெற்றி பெற்று நின்று கொண்டு இருக்கிறோம். அதற்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கைதான் காரணம். தொடர்ந்து எதற்கும் சளைக்காமல் வெற்றி பெற்று காட்டுவோம் என்ற முனைப்பு உள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், எஸ்.இ.பி.சி. அனல்மின்நிலைய தலைமை அதிகாரி நரேந்திரா, அகில இந்திய வர்த்தக தொழில் சங்க முன்னாள் தலைவர்கள் ஜோவில்லவராயர், மணி, உதயசங்கர், வேல்சங்கர், அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க பொதுச் செயலாளர் சங்கர்மாரிமுத்து, பொருளாளர் சேசையா வில்லவராயர், துணைத்தலைவர்கள் பிரேம்வெற்றி, பாலமுருகன், சுரேஷ்குமார், இணை செயலாளர்கள் விவேகம் ஜி.ரமேஷ், ராஜேஷ் பாலச்சந்திரன், நார்டன், நிர்வாக செயலாளர் பிரேம்பால் நாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெண் காவலர்களுக்கு சட்டவகுப்பிற்கான இறுதி தேர்வு தொடங்கியது.
- போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று மேற்பார்வையிட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் பெண் காவலர்களுக்கு சட்டவகுப்பிற்கான இறுதி தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாள் தேர்வை பயிற்சி பள்ளி காவல் கண்காணிப்பாளர் ராசராசன் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று மேற்பார்வையிட்டார். நிகழ்வின்போது காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஜஸ்டின் ராஜ், நெல்லை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மாரிராஜன், முதன்மை கவாத்து போதகர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், முதன்மை சட்ட போதகர் ஜென்ராஸ் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.