என் மலர்
நீங்கள் தேடியது "எல்.முருகன்"
- தமிழ்நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா?
- பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மநபர்கள் வெட்டியதில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இவரது படுகொலை சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கலும், தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.
இது குறித்த எக்ஸ் தள பதிவில், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை பெரம்பூரிலுள்ள அவரது வீட்டின் அருகிலேயே படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டின் தலைநகரிலேயே தேசிய கட்சியின் மாநிலத்தலைவருக்கே உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்றால் திமுக ஆட்சியில் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்?
ஏற்கனவே சேலம் மற்றும் கடலூரில் அதிமுக நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அடுத்தடுத்து நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.
திமுக ஆட்சியில் நேர்மையான அரசு அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள், அப்பாவி பொதுமக்கள் வரை நாள்தோறும் நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பட்டப்பகலில் நடைபெறும் படுகொலைகளை தடுக்க முடியவில்லை. மக்கள் சாலைகளில் நிம்மதியாக நடமாடக்கூட முடியவில்லை. இதெற்கெல்லாம் காவல்துறையை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன பதில் கூறப்போகிறார்? இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? இதுதான் முதலமைச்சர் கூறிய எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சியா? என்ற கேள்விகள் ஒவ்வொரு சாமானியன் மனதிலும் எழுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை படுகொலை செய்த கும்பலை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் முதல் அப்பாவி பொதுமக்கள் வரை படுகொலை செய்யப்படும் கொடூரங்கள் தொடராது தடுத்திட, இனியாவது காவல்துறையை முடுக்கிவிட்டு கடும் நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கை விரைந்து சீர்செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.
சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்" என்று பதிவிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டில் குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
- பள்ளிகளில் மலம் பூசும் அவலங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன.
தமிழகத்தின் பலபகுதிகளில் தீண்டாமை, இரட்டைக்குவளை, இரட்டை சுடுகாடு, கோயில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட வது வார்டு அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சமூக விரோதிகள் புகுந்து பள்ளி சுவற்றிலும், சமையலறையின் பூட்டிலும், மனித கழிவை பூசி அட்டூழியம் செய்துள்ளனர். மனித கழிவால் ஆபாச வார்த்தைகளை எழுதி வைத்துள்ளனர்.
அந்த பள்ளியின் சுற்றுச்சுவர் உயரம் குறைவாகவும், பல இடங்களில் இடிந்தும் உள்ளதால், விடுமுறை நாட்களில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து தகாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
பள்ளிகளிலும் பொது இடங்களிலும் இதுபோன்ற அருவெறுக்கத்தக்க வகையில் கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தேக்கத் தொட்டியில் சமூக விரோதிகள் மலம் கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர்ந்து பேராட்டங்கள் நடத்தியுள்ளன.
ஆனால் 500 நாட்களை கடந்த பின்னரும் இந்த வழக்கில் இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல் வேண்டுமென்றே இந்த வழக்கு தாமதம் செய்யப்பட்டு வருகிறது.
இதுபோலவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வாயிற்கதவில் மனித கழிவு பூசப்பட்ட சம்பவம் நடந்தது. இதுபற்றி எந்த விசாரணையும் நடைபெறவில்லை.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பனைக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தொட்டியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துர்நாற்றம் வீசியதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் இதனை விசாரணை செய்து உண்மையை கண்டறியவில்லை. மாறாக சம்பவத்தையே மறைத்து விட்டனர்.
இந்த சம்பவம் நடந்த பிறகு மேட்டுரை அடுத்த கொளத்தூர் அருகே காவேரி புரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலை உணவுத் திட்ட சமையல் கூடத்தில் மனிதக் கழிவை பூசி மர்ம நபர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள சங்கம் விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவாண்டான் தெருவில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்த சம்பவம் நடந்தது. அதிகாரிகளை வைத்து தொட்டியில் பாசி பிடித்ததால் துர்நாற்றம் வீசியதாக சம்பவத்தை வழக்கம்போல் திசை திருப்பும் வேலையில் திமுக அரசு இறங்கியுள்ளது.
இதுதொடர்பான விசாரணையின்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்து வரும் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையே சுட்டிக்காட்டி கண்டித்தது தமிழ்நாடு முழுவதும் 445 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளி வந்துள்ளன.
தமிழ்நாட்டில் குடிநீர்த் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கல்வி எனும் அறிவு தீபத்தை ஏற்றும் பள்ளிகளில் மலம் பூசும் அவலங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. உலகின் பல பகுதிகளில் இல்லாத இந்த மாபெரும் சமூக அநீதி தொடர்ந்து நிகழ்வது திமுகவினர் திராவிட பெருமை பேசும் தமிழகத்தில் தான் என்பது வேதனையான ஒன்று.
தமிழகத்தின் பலபகுதிகளில் தீண்டாமை, இரட்டைக்குவளை, இரட்டை சுடுகாடு, கோயில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. அரசு பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சுவர், இரவுக் காவலாளி இல்லாததால் மது அருந்துவோரின் கூடாரமாக பள்ளிகள் மாறி வருகின்றன. பள்ளிகளில் உரிய சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.
அரசு பள்ளிகளில் தேவையான குறைந்தபட்ச உட்கட்டமைப்புகள் இல்லாததால் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் சாதனை ஆட்சி நடத்துவதாக தற்பெருமை பேசும் திமுகவும், முதலமைச்சரும் தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற அவலங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கை வயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு இதுவும் கொடூரமான செயல். பள்ளி சுவற்றிலும் பள்ளி சமையலறை பகுதியிலும் மனித கழிவு பூசப்பட்ட செய்தி அதிர்ச்சியோடு பெரும் அருவருப்பை ஏற்படுத்துகிறது.
நாகரிகமற்ற இச்செயலை கண்டிப்பதோடு இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனை வாங்கித் தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- தமிழக போலீஸ் இன்னும் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வி.சி.க.வின் மதுவிலக்கு மாநாடு என்பது மிகப்பெரிய நாடகம்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பா.ஜ.க. தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை தொடங்கி வைப்பதற்காக மத்திய மந்திரி எல்.முருகன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சியை காண வந்தவர்களில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்க சம்பவம்.
விமானப்படை அதிகாரிகள் தமிழக அரசிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதற்கேற்றார் போல் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதனை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது.
தமிழகத்தில் டாஸ்மாக் எண்ணிக்கை, மனமகிழ் மன்றத்தை அதிகரித்துள்ளனர். ஒவ்வொரு பள்ளிகளிலும் போதைப் பொருட்கள் அதிகரிக்கிறது. இந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள், பெற்றோருக்கு கவலையாக உள்ளது.
தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ரூ.3000 கோடி போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக போலீஸ் இன்னும் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநர் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
வி.சி.க.வின் மதுவிலக்கு மாநாடு என்பது மிகப்பெரிய நாடகம். அது திருமாவளவன், முதல்-அமைச்சர் இணைந்து அரங்கேற்றிய நாடகம் தான். வெளிநாடு சென்று உரிய முதலீடுகளை கொண்டு வராததால் முதல்-அமைச்சர், திருமாவும் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
கனிமொழி டுவிட்டர் பதிவில் சமாளிக்க முடியாத கூட்டத்தை தவிர்த்து இருக்கலாம் என்ற கருத்து கூறியுள்ளார். தமிழக அரசால் முடியவில்லை என்ற உண்மையை அவர் சொல்லியிருக்கிறார்.
கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அரியானாவில் மீண்டும் ஆட்சி அமைப்போம். மக்கள் சுதந்திரமாக நடமாடு கிறார்கள். சுதந்திரமாக வாக்களித்துள்ளனர்.
வால்மீகி என்ற ஒரு பிரிவை சேர்ந்த மக்கள் முதன் முறையாக 70 ஆண்டுக்கு பிறகு வாக்களித்துள்ளனர். அந்த பகுதியில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- டங்ஸ்டன் சுரங்கம் அமைய அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிறகுதான் தாங்களும் எதிர்ப்பதாக தி.மு.க. அரசு காட்டிக்கொண்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழக மாநாட்டு அரங்கில் நடந்த சர்வதேச உளவியல் மாநாடை தொடங்கி வைத்த மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், அம்பலக்காரர்கள், மத்திய கனிமவளத்துறை மந்திரி கிஷன்ரெட்டியை சந்தித்தனர். அப்போது டங்ஸ்டன் சுரங்கம் வருவதால் அப்பகுதியில் ஏற்படக்கூடிய விவசாய பாதிப்பு பிற பாதிப்புகளை விளக்கி கூறினர்.
இதனடிப்படையில் பிரதமர் மோடியுடன் ஆலோசித்து, மத்திய மந்திரி கிஷன்ரெட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை முழுமையாக ரத்து செய்துள்ளார். இதற்காக மதுரை மேலூர் பகுதி மக்கள் சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் பிரதமர் மோடிக்கும், மத்திய மந்திரி கிஷன்ரெட்டிக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
சுரங்க விவகாரத்தில் தமிழக திமுக அரசு மக்களை ஏமாற்றக்கூடிய விளையாட்டு அரசியலை செய்தது. 2017-ம் ஆண்டு முதல் சுரங்கம் அமைப்பதற்கான நடைமுறை பணிகள் நடந்து வருகிறது.
இது கடந்த 2023-ம் ஆண்டு தீவிரப்படுத்தப்பட்டது. இதில் பொய்யான தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் தி.மு.க. அரசு பரப்பி வந்தது. 2021-ம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தது முதல் இத்திட்டம் தொடர்பாக எந்த எதிர்ப்பையும் தமிழக அரசு பதிவு செய்யவில்லை. மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிறகுதான் தாங்களும் எதிர்ப்பதாக தி.மு.க. அரசு காட்டிக்கொண்டது.
பிரதமர் மோடி உலகம் முழுவதும் திருக்குறளை பரப்பி வருகிறார். தேர்தல் அறிக்கையில் உலகம் முழுவதும் திருக்குறள் கலாச்சார மையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆட்சி அமைந்து 4 மாதங்களில் 5 நாடுகளில் திருக்குறள் கலாச்சார மையத்தை உருவாக்கியுள்ளோம். டெல்லியில் திருக்குறள் மாநாடு நடத்த வேண்டும் என தமிழ் பற்றாளர்கள், சான்றாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான தேதியை விரைவில் அறிவித்து டெல்லியில் திருக்குறள் மாநாடு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.