என் மலர்
நீங்கள் தேடியது "TASMAC"
- இறுதிக்கட்ட விசாரணை வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெறும்.
- வழக்கை வேறு அமர்வு விசாரணைக்கு மாற்ற கோரிக்கை விடுத்தார்.
சென்னை:
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சுமார் 60 மணி நேரம் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும், இந்த சோதனையின் அடிப்படையில் மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரியும் தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை முதலில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் விசாரித்து, மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று வாய்மொழியாக அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக 2 நீதிபதிகளும் கூறினர். இதனால், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தபோது, மூத்த வக்கீல் கே.எம்.விஜயன் ஆஜராகி, டாஸ்மாக் துறையை கவனித்து வரும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வக்கீலாக கே.ராஜா உள்ளார். இவர் நீதிபதி கே.ராஜசேகரின் இளைய சகோதரர் என்பதால், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றலாம்' என்றார்.
ஆனால், இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்தனர்.
இந்த நிலையில், ஐகோர்ட்டு தலைமை நீதி பதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு இன்று காலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல் ஆஜராகி, ''டாஸ்மாக் துறையை கவனித்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வக்கீலாக, நீதிபதி கே.ராஜசேகரின் தம்பி உள்ளதால், இந்த வழக்கை வேறு அமர்வு விசாரணைக்கு மாற்ற வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்க மறுத்த நீதி பதிகள், 'இதுகுறித்து சம்பந்தப்பட்ட நீதிபதிகளிடம் முறையிடலாம்' என்று கூறினர்.
- அமலாக்கத் துறை சார்பில் புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- மனுவில், டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பான தகவல்கள் இடம்பெற்று இருந்தன.
சென்னை:
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின்னர் மதுபான கொள்முதல் நடவடிக்கைகளில் ரூ.1000 கோடி வரை முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை, அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அடிப்படை கட்டமைப்புக்கு விரோதமானது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானதாக அறிவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக உள்துறை செயலாளர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும். எந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்த விவரங்களையும் அமலாக்கத்துறை தெரிவிக்க உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அறிவித்தனர். இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும் படியும் பரிந்துரைத்தனர்.
அதே நேரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாக குறிப்பிட்டு கோரிக்கை வைக்காமல், பொத்தாம் பொதுவாக உள்ளதால் அதை திருத்தம் செய்து புதிய மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.
அதன்படி டாஸ்மாக் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்ட டாஸ்மாக் நிறுவனமும், தமிழக அரசும் இணைந்து திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்து உள்ளன. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'தமிழக அரசின் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. ஆரம்ப கட்டத்திலே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடாது. அமலாக்கத்துறையின் சட்டப்பூர்வமான விசாரணையை திசை திருப்பும் வகையில் இந்த வழக்குகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ளது. தமிழக அரசுக்கு அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு ஆணையத்திடம் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.
ஆனால் அங்கு எந்தவிதமான வழக்கும் தொடராமல் நேரடியாக உயர்நீதிமன்றத்தை நாடியது தவறானது. கடந்த காலங்களில் டாஸ்மாக் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ததன் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை இந்த சோதனையை நடத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அரசு குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது" என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த பதில் மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை 8ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், 7 ந்தேதி பதில் மனுக்களை தாக்கல் செய்து ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த வழக்கு 8 மற்றும் 9-ந்தேதிகளில் விசாரிக்கப்படும். அனைத்து தரப்பும் தவறாமல் வாதங்களை முன் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
- பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நள்ளிரவில் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
- கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
ஈரோடு:
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது சோதனையில் ரூ.1000 கோடி வரை ஊழல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஈரோடு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நள்ளிரவில் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
அந்தப் போஸ்டரில் ஆயிரம் ரூபாய் கொடுப்பதுபோல் கொடுத்து ஆயிரம் கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? பாட்டிலுக்கு 10 ரூபாய், விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல், உரிமம் பெறாத பார் மூலம் 40 ஆயிரம் கோடி ஊழல் போன்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதேபோல் பவானி, பெருந்துறை, கவுந்தப்பாடி, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தது. இதனைப் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
- கடந்த 20-ந்தேதி நடந்த விசாரணையின்போது, இந்த வழக்கிற்கு அமலாக்கத்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
- டாஸ்மாக் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை எடுக்கக்கூடாது என்று தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர்.
சோதனை முடிவில் பார் உரிமம் வழங்கியது, மதுபானங்கள் கொள்முதல் செய்தது உள்ளிட்டவற்றில் 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை மற்றும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மற்றும் நீதிபதி என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
கடந்த 20-ந்தேதி நடந்த விசாரணையின்போது, இந்த வழக்கிற்கு அமலாக்கத்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
அதில், என்ன குற்றச்சாட்டு? அதற்கான முகாந்திரம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்து வழக்கை 25-ந்தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தனர்.
அதுவரை டாஸ்மாக் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை எடுக்கக்கூடாது என்று தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்துள்ளது.
எனவே இந்த வழக்கு இனி வேறொரு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை விசாரித்து ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் நீதிபதிகள் விலகல் முடிவை எடுத்துள்ளனர்.
- அமலாக்கத் துறையினருக்கு உயர்நிதீமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனங்கள் மற்றும் மது விற்பனை நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், இது தொடர்பாக கூடுதல் தகவல்களை வழங்கவும் அமலாக்கத் துறையினருக்கு உயர்நிதீமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'டாஸ்மாக்' நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸமாக் தலைமை அலுவலகம் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள் அடிப்படையில் டாஸ்மாக் தலைமை அலுவலம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மதுபானங்கள் ரூ. 10 முதல் ரூ. 30 வரை கூடுதலாக வசூல் செய்தது.
டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகளுடன் நேரடி தொடர்பு இருந்தது, கொள்முதல் விலையை குறைத்து காட்டியது. பணியிட மாற்றம், பார் உரிமம் உள்ளிட்டவைகளை பெற லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபோல பல முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்பு உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
அந்த மனுக்களில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை மற்றும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை கோரி தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணக்கு வந்தது. இந்த மனுவை நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மற்றும் நீதிபதி என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
அப்போது டாஸ்மாக் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் அமலாக்கத்துறையிடம், "எதற்காக சோதனை நடத்தப்பட்டகிறது என அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தீர்களா? இரவு நேரத்திலும் சோதனையா?" என்று கேட்டனர். அதற்கு, "இரவில் சோதனை நடக்கவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் யாரையும் நாங்கள் சிறைபிடிக்கவில்லை; யாரையும் துன்புறுத்தவில்லை" என்று அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறும் போது, "எந்த அதிகாரி தவறு செய்துள்ளார் என்று தெரியாமல் எப்படி அனைத்து அதிகாரிகளையும் நீங்கள் தடுத்து வைக்க முடியும்? அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும், அதை செயல்படுத்திய விதம் தவறு. அமலாக்கத்துறை சோதனை நடத்த காரணமான வழக்குகள், விவரங்கள் உள்ளிட்டவைகளை பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும்" என்று அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.
பின்னர் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வரும் 25ம் தேதி வரை அமலாக்கத்துறைக்கு தடைவிதித்த நீதிபதிகள், அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.
முன்னதாக "சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டப்பிரிவு 17-ன் படி அமலாக்கத்துறை சோதனை அதிகாரம் குறித்து விளக்கியுள்ளது. சோதனை நடத்துவதாக இருந்தால் அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு சந்தேகப்படுவதற்கான காரணங்கள் இருக்க வேண்டும்" என்று டாஸ்மாக் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், "சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எந்த அதிகாரிக்கும் எதிராக ஆதாரம் இல்லை. அமலாக்கத்துறை பிரிவு 17ன் படி எல்லா இடங்களிலும், ஆதாரங்கள் இல்லாமல் விசாரணை நடத்த முடியுமா? 60 மணி நேரம் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை சட்டவிரோதமாக அமலாக்கத்துறையினர் சிறை பிடித்து வைத்துள்ளனர்" என்றும் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்பு.
- அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில், அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, மார்ச் 6 முதல் 8ம் தேதி வரை நடந்த அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்க மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த மனுவில், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளையோ, ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
- பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில், டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியும், அதனை கண்டித்தும் நேற்று தமிழக பாஜகவினர் (மார்ச் 17) முற்றுகை போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில், "மோடியின் ஊழல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்" என பாஜகவினரே கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க. தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
- தமிழிசை சவுந்தரராஜன், கரு நாகராஜன் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் 1,078 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், குடோன் மற்றும் பல்வேறு மதுபான தொழிற்சாலைகளில் அமலாக்கத்துறை கடந்த 6-ந்தேதி சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி ஊழல் நடத்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழலை கண்டித்து சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் சென்னையில் டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழிசை சவுந்தரராஜன், கரு நாகராஜன் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் 1,078 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல் அனுமதியின்றி போராட்டம் நடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 1,078 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- தமிழக பாஜகவினர், தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை
- தமிழ்நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? எதற்காக இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்?
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இதனையடுத்து, டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியும், அதனை கண்டித்தும் தமிழ்நாடு முழுக்க இன்று (மார்ச் 17) பாஜகவினர் முற்றுகை போராட்டம் நடத்த முயன்று கைதாகினர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "அண்மையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக நிறுவனத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை. அதில் ரூ.1000 கோடி அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகத் தெரிவித்தது. இந்த முறைகேடுகள் தொடர்பாக ஒன்றிய அரசின் அமலாக்கத் துறையானது துரிதமாகச் செயல்பட்டு மேல்நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதுபோன்று ஏதும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.
மாறாக அமலாக்கத் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழக பாஜகவினர், தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை. நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள ஆளும் கட்சியினர், முற்றுகைப் போராட்டத்தை நடத்தி, அதன் வாயிலாக எதை வலியுறுத்த முயல்கின்றனர்? மற்ற மாநிலங்களில் இது போன்ற மோசடிகள் நடைபெற்ற போது என்ன நடந்தது? தமிழ்நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? எதற்காக இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்?
தற்போது. தமிழகத்தில் நடைபெற்று வரும் பா.ஐ.க. தி.மு.க. நடத்தும் நாடகப் போக்கினைப் பார்த்தால் என்ன தெரிகிறது? ஒன்றியம் மற்றும் மாநிலத்தை ஆளும் அரசுகள் வெளியில் தங்களை எதிரிகள் போன்று காட்டிக்கொண்டு, புறவாசல் வழியாக மறைமுகக் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதே தெரிகின்றது. இதை அம்பலப்படுத்தி ஏற்கெனவே எங்கள் கழகத் தலைவர் அவர்கள் கூறியது முற்றிலும் உண்மையே என்பதை மக்களும் உணரத் தொடங்கி உள்ளனர். இது. இன்று நடைபெற்ற போராட்டம் மற்றும் கைது நாடகத்தின் வாயிலாக வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.
டாஸ்மாக் நிறுவன முறைகேடுகள் தொடர்பாக உண்மையான விசாரணை நடைபெற வேண்டும். இதுவே மக்கள் நலனை நோக்கும் அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.
எனவே, ஒன்றிய அரசுக்குத் தமிழக மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருக்குமெனில், டாஸ்மாக் மோசடி விவகாரத்தில் தொடர்ந்து மேல்நடவடிக்கை மேற்கொண்டு தவறு இழைத்தவர்களுக்கு. சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் வழியில் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றார் அமைச்சர் ரகுபதி.
- பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் அமலாக்கத்துறை மூலமாக நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
டாஸ்மாக் நிறுவன அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாற்று கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களை பழிவாங்க மாட்டோம் என பாஜகவினர் சொன்னார்கள்.
ஆனால், பாஜக ஆளாத மாநிலங்களில் பழிவாங்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.
மாற்று கட்சியினர் எங்கெல்லாம் ஆட்சி செய்கிறார்களோ அங்கெல்லாம் மத்திய பாஜக அரசு பழி வாங்குகிறது.
அமலாக்கத்துறை வழக்கு தொடரப்பட்டவர்கள் பாஜகவில் சேர்ந்தவுடன் புனிதர்களாகி விடுகிறார்கள்.
பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் அமலாக்கத்துறை மூலமாக நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
டெல்லி பாணியில் அரசியல் செய்யலாம் என்று பாஜக கனவு கண்டு கொண்டிருக்கிறது.
அமலாக்கத்துறையில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியர்கள் அல்ல. அமலாக்கத்துறை அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துறை அதிகாரிகளே லஞ்சம் வாங்குகிறார்கள்.
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழலுக்கு ஏதேனும் ஆதாரங்கள் இருக்கிறதா ?
அனுமதியின்றி போராடப் போகிறவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்வது தவறு இல்லை. முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட அண்ணாமலை வந்து பார்க்கட்டும்; என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.
டாஸ்மாக் மதுபான விற்பனையால் இளம் விதவைகள் அதிகரிப்பதாக கூறுவதில் உண்மை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாஜக தலைவர் எச்.ராஜாவை போலீஸ் வாகனத்தில் ஏறுமாறு காவலர்கள் கூறினர்
- காவல் துறையினரை நோக்கி எச்.ராஜா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில், டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியும், அதனை கண்டித்தும் தமிழ்நாடு முழுக்க இன்று (மார்ச் 17) முற்றுகை போராட்டம் நடத்த தமிழக பா.ஜ.க. சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்துக்கு வராமல் தடுக்கும் வகையில் அவர்களின் வீடுகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு வெளியே வராமல் தடுத்து நிறுத்தினார்கள். இதனையடுத்து, பாஜக தலைவர்களான அண்ணாமலை, தமிழிசையை போலீசார் கைது செய்தனர்.
இதனிடைய தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் எச்.ராஜாவை போலீஸ் வாகனத்தில் ஏறுமாறு காவலர்கள் கூறினர். அப்போது, நாய் ஏத்துற வண்டியில நான் ஏற மாட்டேன்"... நான் என்ன குற்றவாளியா? என்று கூறி காவல் வாகனத்தில் ஏற அவர் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து எச்.ராஜாவை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
- மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
- தி.மு.க. அரசு மாபெரும் தவறு செய்திருக்கிறது.
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் புயலை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கண்டித்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் டாஸ்மாக் ஊழலை கண்டித்து இன்று மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில், ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ஜ.க. தலைவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதன்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்ட பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையையும் காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் பா.ஜ.க. தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அண்ணாமலை, "ஒருவருடைய மடியில் கனமிருந்தால் மட்டும்தான் வழியில் பயம் இருக்கும். இன்றைக்கு தி.மு.க. அரசு மாபெரும் தவறு செய்திருக்கிறது. அதனால் பயத்தில் இருக்கிறார்கள்.
ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்யும் போது குரல் வளையை நசுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். காவல் துறைக்கு இதுதான் வேலையா? தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு ஒவ்வொரு இடத்திலும் தடுத்து நிறுத்துகிறார்கள்.
இன்றைக்கு தடுக்கட்டும். அடுத்த ஆர்ப்பாட்டம் தேதி சொல்லாமல் நடக்கும். அது 22-ந்தேதி நடக்கலாம். அல்லது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எதை வேண்டுமானாலும் முற்றுகையிடுவோம். அது முதலமைச்சரின் வீடாக கூட இருக்கலாம்.
எங்களை பொருத்தவரை அடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். ஆனால் தேதி சொல்ல மாட்டேன். இந்த முறை காவல் துறைக்கு மரியாதை கொடுத்து தேதியை சொல்லி இருந்தோம். அவர்கள் இதுபோல் செய்வதால், ஒரு அரசியல் கட்சியாக நாங்களும் வேறு ஸ்டைலில் செய்ய ஆரம்பிப்போம்.
நான் பேசினால் பல விஷயங்கள் வெளிவரும் என்பதால் என்னை பேச விடாமல் தடுப்பதற்காக ஆர்ப்பாட்டத்துக்கு போக விடாமல் செய்கிறார்கள். காவல் துறை என்ன வேண்டுமானாலும் முயற்சி எடுக்கட்டும்.
எங்களை பொறுத்தவரை டாஸ்மாக் ஊழலில் யார் குற்றவாளிகள் என்று நாங்கள் கருதுகிறோமோ எல்லோரையும் ஜனநாயக முறையில் முற்றுகையிட எங்களுக்கு உரிமை இருக்கிறது. டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. அமலாக்கத்துறை சோதனை நடத்தி இதை தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டு அரசியலை உலுக்குவதற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் நல்ல அரசியலை கொண்டு வருவதற்கு பா.ஜ.க. முன்னெடுத்து இருக்கக்கூடிய இந்த ஆர்ப்பாட்டம் அச்சாணியாக அமையும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
டாஸ்மாக்கில் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்பது எனது அனுமானம். நான் பொறுப்பான பதவியில் இருப்பதால் அமலாக்கத்துறை சொல்லி இருப்பது போல ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கும் என்று கூறுகிறேன். பா.ஜ.க. மீதுள்ள பயத்தால் போராட்டம் தடுக்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.