என் மலர்
நீங்கள் தேடியது "Tiruvarur accident"
- கட்டுமான பணிக்காக நீட்டி விடப்பட்டிருந்த இரும்பு கம்பியில் குமாரின் உடல் சிக்கி, அவரது வயிறு மற்றும் தொடை பகுதியில் பலமாக குத்தியது.
- மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த பனங்குடி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 50). இவர் நன்னிலம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தேன்மொழி (38). மகள் ஓவியலட்சுமி (17). கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று குமார் அவரது மனைவி மற்றும் மகளுடன் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக பனங்குடியில் இருந்து திருவாரூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின், பொருட்கள் வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது விசலூர் என்ற இடத்தில் செல்லும்போது, அங்கு நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக குமார் மோட்டார் சைக்கிளுடன் நிலைதடுமாறி விழுந்தார்.
இதில் கட்டுமான பணிக்காக நீட்டி விடப்பட்டிருந்த இரும்பு கம்பியில் குமாரின் உடல் சிக்கி, அவரது வயிறு மற்றும் தொடை பகுதியில் பலமாக குத்தியது. இதில் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், அவரது மகளுக்கு இரு கால்களிலும் எலும்பு முறிவும், மனைவி தேன்மொழிக்கு முகம், கை, கால்களில் பலத்த காயங்களுடன் உள்ளே கிடந்துள்ளார்.
அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, நன்னிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் எவ்வித அறிவிப்பு பலகையோ, சாலை தடுப்புகள் வைக்காததும், அப்பகுதியில் மின் விளக்கு வசதிகள் இல்லாததுமே காரணம் எனக்கூறி அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டம் கைவிடப்பட்டது.
மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவாரூர் அருகே விளமல் கூட்டுறவு நகரை சேர்ந்தவர் செல்வராஜன் (வயது 65). விவசாயி.
இவர் நேற்று திருவாரூர் பஸ் நிலையம் கடைவீதிக்கு சென்று விட்டு பழைய தஞ்சை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி, திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செல்வராஜன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து பற்றி திருவாரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத நேரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக அலிவலம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கருணாகரனை போலீசார் கைது செய்தனர்.