search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Assembly Election 2026"

    • விஜய் எனது தம்பி, பல முறை அவருக்கு ஆதரவாக நான் பேசியுள்ளேன்.
    • நல்ல தலைவர்கள் இல்லை என்று விஜய் கூறவில்லை. போதிய தலைவர்கள் இல்லை என்றுதான் கூறியுள்ளார்.

    சென்னை:

    நடிகர் விஜய் வழங்கி வரும் கல்வி ஊக்கத் தொகையை பாராட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை இன்று வெளியிட்டிருந்தார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது:-

    கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை!

    ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக் கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது;

    'பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி' எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித் தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப் பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த பாராட்டு தொடர்பாக சீமான் அளித்துள்ள பேட்டியில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விஜயுடன் கூட்டணி அமைப்பதற்கான அஸ்திவாரமாக இதனை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி சீமான் மேலும் கூறியிருப்பதாவது:-

    கல்வியில் சிறந்த மாணவர்களை அழைத்து விஜய் பாராட்டி வருவது உன்னதமான பணியாகும்.

    2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயுடனான கூட்டணிக்கு அஸ்திவாரமாக தான் அவரை பாராட்டியதை எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்கிறீர்கள். அப்படியும் எடுத்துக் கொள்வதில் தவறு எதுவுமில்லையே, நிச்சயமாக எடுத்துக் கொள்ளலாம்.

    இருப்பினும் விஜய் எனது தம்பி, பல முறை அவருக்கு ஆதரவாக நான் பேசியுள்ளேன். அவரது பெயரில் தபால் தலை வெளியிட்ட போது பலரும் எதிர்த்தனர். ஆனால் நான்தான் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தேன். 'கத்தி', 'தலைவா' படங்களுக்கு எதிர்ப்பு வந்தபோதும் அவருக்கு ஆதரவாக நின்றேன். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை என்று விஜய் கூறவில்லை. போதிய தலைவர்கள் இல்லை என்றுதான் கூறியுள்ளார்.

    போதை பொருள் தொடர்பான அவரது பேச்சு மாணவர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

    இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

    பின்னர் அவரிடம் 2026-ம் ஆண்டு தேர்தலில் விஜயுடன் கூட்டணி... என்று கூறி இருப்பதை கூட்டணி உறுதி என்று எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்டபோது அதுபற்றி இதற்கு மேலும் கூற முடியாது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. அப்போது தான் பேசி முடிவெடுப்போம் என்றார்.

    விஜயுடனான கூட்டணி பற்றி சீமான் தெரிவித்துள்ள இந்த கருத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும்.
    • கொள்கைகளோடு ஒத்துப்போகும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே ஏற்பட தொடங்கி இருக்கிறது.

    அந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும், நேருக்கு நேர் மோதுவதற்கு தயாராகி வரும் நிலையில் பாரதிய ஜனதா தலைமையிலான அணியும் களம் காண உள்ளது.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார். அவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் கைகோர்க்க இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.

    இது தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் கூட்டணி தொடர்பான இறுதி அறிவிப்புகள் வெளியாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் முதல் தேர்தல் என்பதால் விஜய் தனித்தே களமிறங்க முடிவு செய்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தேர்தலில் தனித்து போட்டியிட்டு தனது பலம் என்ன? என்பதை பார்த்து விட்டு அதன் பிறகு கூட்டணி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தலாம் என்றே விஜய் முடிவு செய்திருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் நல்ல நட்பில் இருக்கும் விஜய், கூட்டணி அமைக்கும் விஷயத்தில் போதிய ஆர்வம் காட்டாமல் நழுவி சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, 8 சதவீத வாக்குகளை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எத்தனை சதவீத ஓட்டுகளை பெறப்போகிறது? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

    தற்போதைய நிலையில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும்.

    எங்களோடு கூட்டணி அமைப்பதற்கு பல கட்சிகள் இப்போதே ஆர்வம் காட்டி உள்ளன. எங்கள் கொள்கைகளோடு ஒத்துப்போகும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது.

    அதே நேரத்தில் கூட்டணிக்கு யாரும் வராவிட்டாலும் எப்போதும் போல தனித்து களம் காணவும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்றார்.

    விஜயுடனான கூட்டணி பற்றி அவர் மேலும் கூறும்போது, தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் வீழ்த்துவதற்கு புதிதாக ஒரு அணி உருவானால் அதனுடன் விஜயும் கைகோர்த்தால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரது எண்ணமாகவும் உள்ளது. அதையே நாங்களும் விரும்புகிறோம் என்றும் தெரிவித்தார். இருப்பினும் விஜய் எங்களோடு சேரப் போகிறாரா? இல்லையா? என்பது அவர் எடுக்க வேண்டிய முடிவு என்றும் கூறினார்.

    2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தனது ரசிகர் பட்டாளங்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் ஆதரவோடு களம் காண்பது உறுதியாகி இருப்பதால் தேர்தல் களம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    விஜயின் அரசியல் பயணம் தமிழக அரசியலில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? என்பது அனைவரது மத்தியிலும் பேசு பொருளாகவும் மாறி உள்ளது.

    விஜய் தனித்து களம் காணும் பட்சத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் பல முனை போட்டி நிலவி வாக்குகள் சிதறும் சூழல் உருவாகி உள்ளது. இது யாருக்கு சாதகமாக அமையப் போகிறது? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது. முதல் தேர்தலிலேயே விஜய் முத்திரை பதிப்பாரா? என்பதும் புதிய வாக்காளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கட்சி பெயர் முடிவாகி விட்ட நிலையில் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் தெளிவுப்படுத்த விஜய் விரும்புகிறார்.
    • 2026-ம் ஆண்டு தேர்தல்தான் இலக்கு என்பதால் ஒவ்வொரு நடவடிக்கையையும் பொறுமையாக செய்வதற்கு நடிகர் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

    சென்னை:

    தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் விஜய் மக்கள் நலப்பணிகளில் தனது ரசிகர்களை ஈடுபடுத்தி வந்தார். இதற்காக அவர் "விஜய் மக்கள் இயக்கம்" என்ற பெயரில் ஏற்கனவே அமைப்பு ஒன்றை நடத்தி வந்தார்.

    தமிழ்நாடு விஜய் ரசிகர்கள் இந்த அமைப்பு மூலம் மக்கள் நலப்பணிகளை செய்து வந்தனர். இந்த இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற அவர் முடிவு செய்தார்.

    கடந்த சில மாதங்களாக இதற்காக அவர் பல்வேறு பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசியல் கள நிலவரம் பற்றிய ஆய்வு ஒன்றையும் அவர் மேற்கொண்டார். பிறகு தனது விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்தினார்.

    அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து நேற்று அவர் புதிய அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார். அவர் தொடங்கிய கட்சிக்கு "தமிழக வெற்றி கழகம்" என்று பெயரிட்டுள்ளார். நேற்று மதியம் தேர்தல் ஆணையத்திலும் இந்த புதிய கட்சியை பதிவு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.

    பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. நடிகர் விஜய் தொடங்கி உள்ள கட்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவது இல்லை என்று நடிகர் விஜய் தனது திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலே தனது இலக்கு என்றும் அவர் தெளிவுப்படுத்தி உள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய கட்சியின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் விஜய் சுட்டிக்காட்டி உள்ளார்.

    கட்சியின் கொள்கைகள், கொடி, சின்னம் மற்றும் செயல் திட்டங்களை முன் வைத்து அரசியல் பயணம் தொடங்கும் என்றும் நேற்று நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருந்தார்.


    அரசியலில் ஈடுபட போவதாகவும் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் விஜய் கூறியிருக்கிறார். தற்போது அவர் கைவசம் உள்ள படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் முடிவடைய உள்ளன. அதன் பிறகு நடிகர் விஜய் தீவிரமாக தேர்தல் களத்துக்கு வருவார் என்று தெரியவந்துள்ளது.

    கட்சி பெயர் முடிவாகி விட்ட நிலையில் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் தெளிவுப்படுத்த விஜய் விரும்புகிறார். மேலும் கட்சிக்காக வலுவான சட்ட விதிகளை உருவாக்கும் முயற்சிகளிலும் மேற்கொண்டு உள்ளார். திராவிட கழகங்கள், இஸ்லாமிய கட்சிகள், தலித் கட்சிகளின் கொள்கைகளின் அடிப்படையில் விஜய் கட்சியின் கொள்கைகள் அமையும் என்று தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே கட்சி கொடியை வடிவமைத்து மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் திட்டத்தையும் நடிகர் விஜய் வைத்துள்ளார். கட்சி கொடியை வடிவமைக்கும் விஷயத்தில் மற்றவர்களின் கருத்துகளை கேட்டாலும் விஜய்யின் முடிவுதான் இறுதி முடிவாக இருக்கும் என்று அவரது கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    கட்சி கொள்கை, கட்சி கொடி போன்றவற்றை வெளியிட்ட பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் திட்டத்தையும் நடிகர் விஜய் வைத்துள்ளார். வருகிற ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் தொடங்குவார் என்று தெரிகிறது. நடிகர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை வரையறுத்து வருகிறார்கள். 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் விஜய்யின் சுற்றுப்பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2011-ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் விஜய் தனது ரசிகர்கள் கூட்டத்தை திரட்டினார். மீனவர்களுக்கு ஆதரவாக நடந்த அந்த கூட்டம் திராவிட கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் இருந்தது. அதன் பிறகு விஜய் அந்த அளவுக்கு தனது ரசிகர்களை எந்த இடத்திலும் கூட்டவில்லை.

    தற்போது அரசியலுக்கு வந்து இருப்பதால் ரசிகர்கள், பொதுமக்களை ஒரே இடத்தில் திரட்டி மிக பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். அந்த முதல் பொதுக்கூட்டம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று நடிகர் விஜய் கருதுகிறார். இதற்காக தனி குழு ஒன்று திட்டமிட்டு வருகிறது.

    ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டும் அந்த மாநாடு வழக்கமாக திராவிட கட்சிகள் நடத்தும் மாநாடு போல அமையாமல் மாறுபட்ட வகையில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விஜய் கருதுகிறார். குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்.

    அந்த வகையில் திருச்சி அல்லது கடலூரில் முதல் மாநாட்டை நடத்த நடிகர் விஜய் விரும்புகிறார். இந்த 2 நகரங்கள் தவிர வேறு ஏதாவது இடத்தில் முதல் மாநாட்டை நடத்தலாமா? என்றும் ஆலோசனை நடந்து வருகிறது.

    முதல் மாநாட்டுக்கான தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. 2026-ம் ஆண்டு தேர்தல்தான் இலக்கு என்பதால் ஒவ்வொரு நடவடிக்கையையும் பொறுமையாக செய்வதற்கு நடிகர் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

    அரசியலில் அவரது ஒவ்வொரு நகர்வும் "கப்பு முக்கியம் பிகிலு" என்று அவர் ஒரு படத்தில் உச்சரிக்கும் வசனத்தை பிரதிபலிப்பது போல அமைந்துள்ளது.

    ×