என் மலர்
நீங்கள் தேடியது "village people strike"
வேதாரண்யம்:
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி வீசிய கஜா புயலால் பெரும் பாதிப்புக்குள்ளானது.
புயலால் சாய்ந்த மின்கம் பங்களை சீரமைக்கும் பணி நடந்தது. இதில் நகர்ப் புறங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. கிராமப்புறங்களில் மட்டும் இன்னும் 20 சதவீதம் மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டியது உள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலத்தில் வயல் பகுதிகளில் மின்கம்பங்களை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கத்தரிப்புலத்தில் வள்ளுவர் சாலை பகுதியில் கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு தற்போது மின் வினியோகம் அளிப்பதற்கு மின் கம்பங்கள் நடப்படுகின்றன. அவ்வாறு நடப்படும் மின்கம்பங்கள் சாலையோரம் நடாமல் வயல் பகுதிகளில் நடப்பட்டு வருகிறது.
இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.
மேலும் சாலை வழியே மின்கம்பங்களை நட்டு மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் வந்தனர்.
ஆனால் வயல்பகுதிகளில் மட்டுமே மின்கம்பங்கள் நடப்பட்டு வந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கத்தரிப்புலம் -பனையடி குத்தகை சாலையில் , புயலால் சாய்ந்த தென்னை மரங்கள் மற்றும் மரங்களை சாலையின் குறுக்கே போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தபகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து கரியாப்பட்டினம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபறறி அதிகாரிகளுடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியே செல்ல வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஏராளமானோர் இன்று காலை ஒன்று திரண்டனர். பின்னர் கோட்டைபட்டியில் திடீர் என மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்தனர். சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருஇந்தளூர், பொட்ட வெளிபகுதியில் உள்ள 3 தெருக்களுக்கு கடந்த 2 மாதமாக குடிநீர் வினியோகிக்கப்பட வில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பொட்ட வெளியில் உள்ள பூம்புகார்-கல்லணை சாலையில் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் டெல்லி பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
அதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வைகையாற்றில் மணல் கொள்ளை அதிகளவில் நடைபெற்றுவருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணல் லாரியை சிறைபிடித்து இரவு முழுவதும் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதும் மணல் கொள்ளை தொடர்ந்து கொண்டே இருந்தது.
மேலும் மணல் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
இன்று காலை அசுர வேகத்தில் வந்த மணல் லாரி குண்டலப்பட்டி பிரிவு அருகே சாலையோரம் நடந்து சென்ற திருப்பதி மனைவி சாத்தாவு(வயது43) என்ற பெண் மீது பயங்கரமாக மோதியது. படுகாயமடைந்த அவர் மதுரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் அணைப்பட்டி- நிலக்கோட்டை சாலை குண்டலப் பட்டிபிரிவு அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்து விரைந்து சென்ற விளாம்பட்டி இன்ஸ் பெக்டர் சுகு மாறன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கிராமமக்கள் சார்பாக 3 கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நஷ்டஈடு வழங்கவேண்டும். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பகுதியில் தொடர்ந்து வரும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.