என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வத்தலகுண்டு"

    • பெயர் பலகை மற்றும் பணம் வசூலிக்கும் கவுண்டர்களை அடித்து நொறுக்கினர்.
    • சுங்கச்சாவடி ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வத்தலக்குண்டு பைபாஸ் வழியே சேவுகம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து 4 வழிச்சாலையாக மாற்றி சுங்கச்சாவடி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொடைரோடு, நத்தம் பகுதியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வரும் நிலையில் மேலும் ஒரு சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் போராட்டமும் நடத்தி வந்தனர்.

    ஆனால் 4 வழிச்சாலைகள் அமைக்காமல் இருவழிச்சாலை மட்டும் முடிந்த நிலையில் சுங்கச்சாவடி இன்று காலை 10 மணிமுதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 7 இடங்களில் பணம் வசூலிப்பதற்கான கவுண்டர்கள் அமைக்கப்பட்டு ஊழியர்களுக்கான அறை மற்றும் கணினிகள் கொண்டு வரப்பட்டன.

    ஆனால் சுங்கச்சாவடி திறக்கும் முன்பு காலை 9 மணிக்கு போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்தனர். இதனால் நள்ளிரவு 12 மணிக்கே சுங்கச்சாவடி திறக்கப்பட்டு வாகனங்களிடம் கட்டணம் வசூல் செய்யப்பட்டது.

    அதிகாலையில் இத்தகவல் பரவியதால் பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் ஒன்று சேர்ந்து சுங்கச்சாவடி நோக்கி வந்தனர். அவர்கள் அங்கிருந்த பெயர் பலகை மற்றும் பணம் வசூலிக்கும் கவுண்டர்களை அடித்து நொறுக்கினர்.

    இதனை தடுக்க வந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருசிலருக்கு மண்டை உடைந்து படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தாக்குதலில் ஈடுபட்டவர்கள் லேப்டாப்களையும் அடித்து நொறுக்கியதுடன், மேலும் பல லேப்டாப்களை தூக்கிச் சென்றனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.

    இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் பரிமளா, கிராம நிர்வாக அலுவலர் சுமதி ஆகியோரும் அங்கு வந்து பார்வையிட்டனர்.

    சுங்கச்சாவடி ஊழியர்களிடம் தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து கேட்டறிந்ததுடன் உள்ளூர் மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் 4 வழிச்சாலை பணிகளை முழுமையாக நிறைவேற்றாமல் சுங்கச்சாவடியை திறக்க கூடாது. உள்ளூர் மக்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இருந்தபோதும் நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்பட்ட சுங்கச்சாவடி முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டதால் தற்போது வாகனங்கள் வழக்கம்போல் கட்டணமின்றி செல்ல அனுமதிக்கப்பட்டன.

    இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிரா உதவியுடன் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

    வத்தலக்குண்டுவில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் அருகே உள்ள வத்தலக்குண்டு காந்திநகர் வடக்கு கணவாய்பட்டி பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் முருகன். பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி கல்யாணி. இவர்களது மகள் சுவேதா, தர்சினி. நேற்று காலை வழக்கம் போல் முருகன் பேக்கரி கடைக்கு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த கல்யாணி தனது மகள்களுடன் வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீர் ஊற்றுவதற்கு சென்று விட்டனர். மாலை வரை கோவிலில் அவர்கள் இருந்து விட்டனர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்தனர். பின்னர் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை திறந்த அவர்கள் அதில் இருந்த நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    மாலை நேரம் முருகன் வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பீரோவை பார்த்த போது அதில் இருந்த 7 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கபணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. பதறி போன முருகன் தனது மனைவிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவர்கள் அதிர்ச்சியுடன் வீட்டுக்கு விரைந்தனர்.

    இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் முருகன் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
    ×