கிரிக்கெட்
null

லாகூரில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி: சாம்பியன் டிராபி அட்டவணையில் தகவல்

Published On 2024-07-03 12:46 GMT   |   Update On 2024-07-03 12:47 GMT
  • மார்ச் 1-ந் தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி லாகூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.
  • லாகூரில் அதிகபட்சமாக 7 போட்டிகள் நடைபெற உள்ளது.

"மினி உலக கோப்பை" என அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி 1998-ம் ஆண்டு வங்காளதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் தென்ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 8 போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது.

கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது. 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை 8 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் முதல் தடவையாக நடத்துகிறது.

பாகிஸ்தான் நாட்டில் நடைபெறுவதால் அந்த அணியே அட்டவணையை அறிவிக்கும். அந்த அட்டவணையை ஐசிசி-யிடம் பரிந்துரைக்கும். ஐசிசி மற்றும் மற்ற நாடுகள் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றால் அந்த அட்டவணைப்படி போட்டி நடைபெறும்.

அந்த வகையில் சாம்பியன் டிராபி தொடரின் அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த போட்டி அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 19-ல் தொடங்கி மார்ச் 9-ந் தேதி முடிவடைகிறது. அதன்படி முதல் 20 நாளில் 15 போட்டிகள் நடைபெற உள்ளது.

லாகூரில் அதிகபட்சமாக 7 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் மார்ச் 9-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியும் அடங்கும். மார்ச் 1-ந் தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி லாகூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் இதில் இடம் பெறவில்லை. ஒருநாள் போட்டித் தரவரிசையில் டாப் 8 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. வெஸ்ட்இண்டீஸ், இலங்கை ஆகியவை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன.

இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்பது உறுதியில்லை. மத்திய அரசின் அனுமதியை பொறுத்துதான் இருக்கிறது. இந்த தொடருக்கு இந்திய அணியை தவிர மற்ற அணிகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்து விட்டனர்.

இந்தியா பங்கேற்க மறுத்தால் கடந்ந காலங்களை போல இந்தியா ஆடும் போட்டிகள் வேறு நாட்டுக்கு மாற்றப்படும். 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News