ஆன்மிகம்

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் தேசிகர் வசந்த உற்சவம் நிறைவு

Published On 2016-06-20 08:56 IST   |   Update On 2016-06-20 08:56:00 IST
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தேசிகர் வசந்த உற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது.
கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேசிகருக்கு வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு தேசிகர் உற்சவம் கடந்த 10-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், 10 நாட்கள் உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. அதன்பின்னர், தேசிகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் எதிரே உள்ள அவுசதகிரி மலையின் மீது உள்ள ஹயக்கிரீவர் சன்னதியில் எழுந்தருளினார். பின்னர், ஹயக்கிரீவருக்கும், தேசிகருக்கும் அபிஷேகம் நடந்தது. பின்னர், சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

இதையடுத்து, அங்கிருந்து தேசிகர் புறப்பாடாகி கோவிலுக்கு வந்தடைந்தார். பின்னர், அங்கு அவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News