திருச்செந்தூரில் மாசித்திருவிழா தேரோட்டம்: இரா.கண்ணன் ஆதித்தன் தொடங்கி வைத்தார்
- தேர் எட்டு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது.
- 11-ம் திருவிழாவான நாளை தெப்ப உற்சவம் நடக்கிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் மாசி பெரும் திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருவிழா அன்று குடவருவாயில் தீபாராதனை நடந்தது. 7-ம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
8-ம்திருவிழா அன்று காலையில் சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா, மதியம் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு எட்டு ரதவீதிகளில் சுற்றி வந்து நிலையம் சேர்ந்தது. பின்னர் பெரிய தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
தேரை மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் மாலைமுரசு நிர்வாக இயக்குநர் கதிரேசன் ஆதித்தன், தலைமை நீதித்துறை நடுவர் வசித்குமார்,திருச்செந்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி, திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் வரதராஜன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோவில் தக்கார் கருத்தப்பாண்டி நாடார், தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் காமராசு நாடார், திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் ரமேஷ், தி.மு.க. விவசாய அணி மாநில துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் திருப்பதி மற்றும் குமரேச ஆதித்தன், ரெங்கநாத ஆதித்தன், டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன், சிவநேச ஆதித்தன், முருகன் ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், சிவபாலன் ஆதித்தன், சுப்பிரமணிய ஆதித்தன், சரவண ஆதித்தன், ஜெயந்திர ஆதித்தன், ராதாகிருஷ்ணன் ஆதித்தன், தங்கேச ஆதித்தன், ராமானந்த ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், பகவதி ஆதித்தன், சண்முகானந்த ஆதித்தன், குமாரர் ராமசாமி ஆதித்தன், சேகர் ஆதித்தன், எஸ்.எஸ்.ஆதித்தன், எஸ்.ஆர்.எஸ். சபேச ஆதித்தன், ஹெக்கேவார் ஆதித்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேர் எட்டு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. பின்னர் தெய்வானை அம்பாள் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு எட்டு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பியது விண்ணை பிளந்தது.
11-ம்திருவிழாவான நாளை (வியாழக்கிழமை) தெப்ப உற்சவம் நடக்கிறது. நாளை இரவு 10 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
12-ம்திருவிழாவான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி மஞ்சள் நீராட்டு கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் திருவிழா மண்டபம் வந்து அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி,அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.