வழிபாடு

நினைத்ததை நிறைவேற்றும் பட்டுக்கோட்டை `நாடியம்மன்'

Published On 2025-03-06 08:36 IST   |   Update On 2025-03-06 08:36:00 IST
  • ஆலயம் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது.
  • நாடியம்மாள் என்ற பெயர் பலருக்கும் வைக்கப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் சோழ மன்னர்களால் பல கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. சோழர்களைத் தவிர வேறு சில வழியில் வந்த மன்னர்களும் பல்வேறு ஆலயங்களை அமைத்துள்ளனர்.


அந்த வழியில் வந்த மராட்டிய மன்னரான சரபோஜி மன்னரால் பட்டுக்கோட்டை நகராட்சியில் கட்டப்பட்டதுதான், பழமையான நாடியம்மன் கோவில். இந்த ஆலயம் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது.

இந்த ஆலயத்தில் அருளும் நாடியம்மன் என்ற பெண் தெய்வத்தை, பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். தன்னை நாடி வரு பவர்களுக்கு நல்லதை செய்வதால், இந்த அம்மனை அனைவரும் 'நாடியம்மன்' என்று அழைப்பதாக இவ்வூர் மக்கள் சொல்கின்றனர்.

ஒன்றிரண்டு தலைமுறைகளுக்கு முன்புவரை இந்த பகுதியில் நாடியம்மாள் என்ற பெயர் பலருக்கும் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெயரும் கூட, இந்த அம்மனின் வழியால் ஏற்பட்டதுதான் என்கிறார்கள்.


தல வரலாறு

இந்த நாடி அம்மன் கோவில் உருவானது பற்றிய வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. அதை இங்கே பார்க்கலாம். ஒரு முறை தஞ்சை மராட்டிய மன்னரான சரபோஜி மன்னர், காட்டில் வேட்டையாட சென்றார். அப்போது குறிப்பிட்ட ஒரு மிருகத்தை துரத்திக் கொண்டு சென்றபோது, அது பிடிபடாமல் போக்கு காட்டியது.

மன்னனும் விடாமல் அதை நோக்கி ஒரு அம்பை எய்தான். அந்த அம்பு தாக்கிய நிலையில், அந்த மிருகம் அருகில் இருந்த அடர்ந்த புதருக்குள் போய் ஒளிந்துகொண்டது.

தாக்குதலுக்குள்ளான அந்த மிருகம், புதரை விட்டு தப்பிச் செல்ல வாய்ப்பில்லை என்று நினைத்த மன்னன், அந்த புதரை நீக்கினான். அப்போது அந்த புதருக்குள் ரத்தம் ஒழுக, அழகிய பிடாரி அம்மன் சிலை ஒன்று தென்பட்டது.

அந்த சிலையை எடுத்து வந்த சரபோஜி மன்னன், சிலையை சுத்தம் செய்து பட்டுக்கோட்டை பகுதியில் இருந்த சிவன் கோவில் பூசாரிகளை அழைத்து, பிடாரி அம்மனுக்கு என்று தனியாக ஒரு ஆலயத்தை அமைத்து அதில் சிலையை பிரதிஷ்டை செய்தான்.

அப்போது கோவில் அமைந்த இடம் வனமாக இருந்தது. அந்த வனத்தில் அமையப்பெற்ற பிடாரி அம்மனுக்கு, நித்திய படி பூஜைகளும், விழாக்களும் கொண்டாடும் பொறுப்பு மற்றும் ஆலயத்தை நிர்வகிக்கும் பொறுப்புகளை அவ்வூரைச் சேர்ந்த சின்னான் செட்டியார் என்பவரிடம் சரபோஜி மன்னன் வழங்கினார்.

ஆரம்பத்தில் காட்டில் கண்டெடுத்த கருங்கல் பிடாரி அம்மன் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர். பின்னர் சின்னான் செட்டியாரின் முயற்சியின் காரணமாக, பிடாரி அம்மனுக்கு ஐம்பொன் சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதை பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். இந்த அம்மனே, நாளடைவில் 'நாடியம்மன்' என்ற பெயர் பெற்றார் என்கிறது ஆலய வரலாறு.

இங்கு ஆண்டுதோறும் பங்குனி - சித்திரை மாதங்களில் இந்த அம்மனுக்கு காப்பு கட்டி திருவிழா நடை பெறுகிறது. திருவிழா காலங்களில் இந்த அம்மன் தனது ஆலயத்தை விட்டு குடிபெயர்ந்து, பெரிய கடை தெருவின் நடுவில் இருக்கும் மண்டகப்படி நடைபெறும் மண்டபத்தில் வீற்றிருப்பாள்.

கொடியேறி திருவிழா முடிந்த பிறகுதான் மீண்டும் ஆலயம் திரும்புவாள் என்கிறார்கள். இந்த ஆலயத்தில் நடைபெறும் வரகரிசி மாலை, வெண்ணெய் தாழி போன்ற திருவிழாக்கள் சிறப்பானது.

இந்த நிகழ்வில், வெண்ணெய் பானையுடன் அம்மன் வீதி உலா வரும்போது, பக்தர்கள் பலரும் அம்மனுக்கு பட்டு உடையை சாத்துவார்கள்.


ஐம்பொன் சிலையானது, திருவிழா காலங்களில் மட்டும் மண்டபத்திற்கு கொண்டுவரப்படும். தவிர ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் மண்டகப்படி நடைபெறும். அனைவராலும் வணங்கப்படும் இந்த அம்மன், நினைத்ததை நடத்தி வைக்கும் சக்தி படைத்தவளாக இருக்கிறாள்.

அமைவிடம்

தஞ்சாவூரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும், அதிராமபட்டினத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திலும், பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 1½ கிலோமீட்டரிலும் நாடியம்மன் கோவில் அமைந்திருக்கிறது.

Tags:    

Similar News