வழிபாடு

திருவாலங்காடு கோவிலில் நடராஜருக்கு இன்றிரவு முழுவதும் விடிய விடிய சிறப்பு அபிஷேகம்

Published On 2023-01-05 07:39 GMT   |   Update On 2023-01-05 07:39 GMT
  • நாளை அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனம் நடைபெறுகிறது.
  • இன்று இரவு 9 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடக்கிறது.
  • 7-ந்தேதி காலை 8.45 மணிக்கு சாந்தி அபிஷேகம் நடக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் சிவபெருமான் திருநடனமாடிய 5 திருச்சபைகளில் முதல் சபையான ரத்தின சபையாக திகழ்கிறது.

காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து பாடிய தலமாகவும் விளங்குகிறது.

மார்கழி மாதம் திருவா திரை நட்சத்திரத்தில் இக்கோவிலில் ஆருத்ரா விழா விமரிசையாக நடைபெறும். நடராஜ பெருமானின் 6 அபிஷேகங்களில் ஆருத்ரா அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த தலத்தில் நடராஜரின் திருமேனியில் விளாம்பழம் சார்த்தப்பட்டு அதன்மீது சிவப்பு வண்ணத்தில் உள்ள மாதுளை முத்துக்கள் சார்த்தப்படும்.

அதை பார்க்கும்போது நடராஜர் மீது ரத்தின கற்கள் பதித்திருப்பதுபோல் இருக்கும். ரத்தின சபாபதி பெருமானுக்கு இரவு 9 மணிக்கு அபிஷேகம் தொடங்கி அதிகாலை 4 மணி வரை அபிஷேகம் மிகவும் சிறப்பாக நடை பெறுவது வழக்கம்.

ஆருத்ரா வைபவத்தில் நடராஜர் மும்முறை தனி வலம் வருவது அனுக்கிரக தரிசனம் எனப்படும். அந்த தருணத்தில் வானத்தில் கருடன் வட்டமிடும் என்பது ஐதீகம். பின்னர் ராஜகோபுர பிரகாரத்தை வலம் வந்து ஆருத்ரா மண்டபத்தின் அருகே தனது ரத்தின சபையை பார்த்தவாறு நிற்பார்.

தீபாராதனையை ஏற்றுக் கொண்டு பிறகு ஆலமர பிரகார வலம் மீண்டும் ஆருத்ரா மண்டபத்துக்கு வந்து எதிரே திருக்கண்ணாவுக்கு முன்பாக உள்ள நந்தி தேவரை பார்த்தவாறு ரத்தின சபைக்கு செல்வார். அங்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதணை நடைபெறும்.

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் அகிய 5 தொழில்களை நடராஜ பெருமான் புரிவதை இந்த ஆருத்ரா தரிசனம் கொண்டுள்ளது. நடராஜர் ஆருத்ரா மண்டபத் தில் எழுந்தருள்வது படைத்தலை குறிக்கும். ஒவ்வொரு அபிஷேகத் திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அந்தந்த அபிஷே கத்தை ஏற்றுக் கொண்டு அதற்குரிய பலனை கொடுப் பது நம்மை காத்தலை குறிக்கும். நடராஜர் கோபுர தரிசனம் முடிந்து திருக்கண் அறிந்த விநாயகர் ஆலயம் சென்று தீபாராதனையை ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி அழித்தலை குறிக்கும். அதாவது பக்தர்களின் பாவங்கள் மற்றும் துன்பங்களை அழிக்கிறார்.

ஆருத்ரா தினத்தன்று ஆலயத்துக்கு வந்து தரிசனம் செய்யும் பக்தர்களின் பாவங்களை இறைவன் பஸ்மமாக்குகிறார். பஸ்மமாக்கிய பொருளே மையாகிறது. அந்த மையையே திருச்சாந்து பிரசாதமாக தருகிறார்கள்.

இறைவனின் திருவருளை நாடி வரும் பக்தர்களின் பாவங்களை 'வெள்ளை சாத்துபடி' என்னும் வைபவத்தின் மூலம் நீக்கி அவர்களை வெள்ளை மனதுடன் திகழ வைக்கிறார். இதுவே மறைத்தல் ஆகும். திருவீதி உலா முடிந்து முஞ்சிகேஸ்வர தரிசனம் ஆகும்போது அனுக்கிரகம் தருவதே அருளல் ஆகும். அனுக்கிரக தரிசனத்தின் போது பக்தர்கள் வேண்டுவதை அளித்து அருள்பாலிக்கிறார்.

திருவாலங்காடு வடாரண் யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா விழா இன்று நடக்கிறது. ஆருத்ரா விழாவையொட்டி கோவிலில் உள்ள தல விருட்சமான ஆலமரத்தின் கீழ் உள்ள ஆருத்ரா மண்டபத்தில் இன்று இரவு 9 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடக்கிறது.

இந்த சிறப்பு அபிஷேகம் பால், தேன், வில்வப்பொடி, வாழை, பலா, பூக்கள் உள்ளிட்ட 41 வகை பொருட்களால் விடிய விடிய நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து நாளை (6-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனம் நடைபெறுகிறது. அன்று பகல் 12 மணிக்கு அனுக்கிரக தரிசனம் நடக்கிறது. வருகிற 7-ந்தேதி காலை 8.45 மணிக்கு சாந்தி அபிஷேகம் நடக்கிறது.

Tags:    

Similar News