குழந்தை பராமரிப்பு

குழந்தைகளும், செல்லப்பிராணிகளும்...

Published On 2025-02-01 13:46 IST   |   Update On 2025-02-01 13:46:00 IST
  • செல்லப்பிராணிகள் அன்பிற்காக ஏங்குபவை. அவைகளிடம் அன்பாக பழகுங்கள்
  • செல்லப் பிராணியோடு எப்படி விளையாட வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.

குழந்தைகளுக்கு எப்போதும் விளையாடத் துணை தேவை. பெரும்பாலும் தன் வயதை ஒத்தவர்களிடமும், தன்னைவிட வயது குறைந்தவர்களிடமுமே அதிக நேரம் விளையாட விரும்புவார்கள். அதுபோல் வளர்ப்பு பிராணிகளிடமும் அதிக பாசம்காட்டி விளையாட விரும்புவார்கள். குழந்தைகள் விரும்பும் செல்லப்பிராணிகளை, வீட்டில் வளர்க்கிறீர்கள் என்றால் சில விஷயங்களில் கவனமாக இருங்கள். அவை இதோ...

* குழந்தைகள் வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளின் காதைப் பிடித்து இழுக்கும். வாலைப் பிடித்து கடிக்கும். இந்த இம்சைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் செல்லப்பிராணிகள் திருப்பி கடித்துவிடும் அபாயம் உள்ளது. அதனால் எவ்வளவுதான் நல்ல பிராணியாக இருந்தாலும் குழந்தைகளிடமிருந்து அவைகளை சற்று விலக்கி வையுங்கள்.

* குழந்தைகளுக்கும்-செல்லப்பிராணிகளுக்கும் இடையே எப்போதும் தேவையான இடைவெளி இருக்கவேண்டும். பிராணிகளிடம் எப்படி பழகவேண்டும் என்பதை பெற்றோர் குழந்தைகளுக்கு உடனிருந்து கற்றுக்கொடுக்கவேண்டும். அவைகளின் கண்களை நோண்டுவது, கையில் கிடைத்ததை அதன் மீது தூக்கி எறிந்து விளையாடுவது, அவைகளை பயமுறுத்துவது போன்றவைகளில் ஈடுபட குழந்தைகளை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.



* நாய்கள் மனிதர்களிடம் மிக அன்போடு, நன்றியோடு பழகக்கூடியவை. அவைகளுக்கும் குழந்தைகளைப் போல் அன்பு தேவை. குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செல்லப்பிராணிகளை விலக்கி வைக்கும் போது அவைகள் மனதுக்குள் வருத்தப்படும். அதுவே குழந்தைகள் மீது அவைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அதற்கு இடம் கொடுக்காமல் வளர்ப்பு பிராணிகள் மீதும் பாசம் செலுத்துங்கள்.

* குழந்தைகள் சாப்பிடும் தட்டில் வாய் வைக்கவோ, குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களை முகர்ந்து பார்க்கவோ வாய்ப்பளிக்கவேண்டாம். செல்லப்பிராணிகள் அன்பிற்காக ஏங்குபவை. அவைகளிடம் அன்பாக பழகுங்கள். அதேநேரம் குழந்தைக்கு ஆபத்து நேராமலும் பார்த்துக்கொள்ளுங்கள். குழந்தையால் அவைகளுக்கும் ஆபத்து வரக்கூடாது. ஒருபோதும் செல்லப்பிராணியையும் குழந்தையையும் தனியாக பழக அனுமதித்து விடக்கூடாது.

* செல்லப்பிராணியோடு குழந்தை எவ்வளவுதான் அன்போடு பழகினாலும் உங்கள் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே ஆபத்துகளை தவிர்க்கலாம். வெளியில் வாக்கிங் போகும்போது செல்லப்பிராணி, குழந்தை இரண்டையும் அழைத்துச் செல்லலாம். அப்படி செய்தால் வளர்ப்பு பிராணிகள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை அவை புரிந்துகொள்ளும். குழந்தைக்கும்-வளர்ப்பு பிராணிக்கும் இடையே நல்ல புரிதலும் உருவாகும்.

* குழந்தைக்கு உணவூட்டும்போது வளர்ப்பு பிராணிகளை அருகில் சேர்க்கவேண்டாம். அதன் உரோமம் உணவுப் பொருளில் உதிரக்கூடும். குழந்தைகள் வீறிட்டு அழுவதும், கத்துவதும் பிராணிகளுக்கு திகிலை ஏற்படுத்தும். அப்போது அவைகளின் அச்சத்தை போக்கவேண்டும். நாளடைவில் பழகிவிடும். குழந்தைகளிடம் அதிக அன்பு செலுத்துவதை பார்த்து சில நேரங்களில் நாய்கள் பொறாமைப்படுவதுமுண்டு.

குழந்தைகளோடு நாய்களை விளையாட அனுமதிக்கலாம். ஆனால் அப்போது பெற்றோர் அருகில் இருக்கவேண்டும். செல்லப் பிராணியோடு எப்படி விளையாட வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். படிப்படியாக அவர்கள் கற்றுக்கொள்வார்கள். பிராணிகள், குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்க நீங்கள் செயல்கள் மூலம் சொல்லிக் கொடுங்கள். அவைகளும் புரிந்துகொள்ளும்.

Tags:    

Similar News