உள்ளூர் செய்திகள் (District)

200 அரசுப் பள்ளி மாணவர்கள் இஸ்ரோவுக்கு கல்வி பயணம்

Published On 2023-02-13 02:02 GMT   |   Update On 2023-02-13 02:02 GMT
  • இஸ்ரோ செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துகளை கூறி வழியனுப்பி வைத்தனர்.
  • இஸ்ரோ கல்விமுறை பயணமாக அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

சென்னை :

மதுரையில் உள்ள குயின் மீரா சர்வதேச பள்ளி சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்களை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (இஸ்ரோ) கல்விமுறை பயணமாக அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்ஷயம் ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எம்.எஸ்.ரமேஷ், பாடலாசிரியர் மதன் கார்க்கி, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விஷன் 2020 நிறுவனர் திருச்செந்தூரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இஸ்ரோ செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துகளை கூறி வழியனுப்பி வைத்தனர்.

நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பேசியதாவது:-

என்னுடைய அப்பா வானிலை ஆய்வு மையத்தில் வேலைபார்த்து வந்தார். இப்போது இருப்பதுபோல வானிலையை தெரிந்துகொள்ள அப்போது எல்லாம் செயற்கைக்கோள்கள் இல்லை. ராட்சத பலூன் மூலம் கருவிகளை அனுப்பி வானிலையை ஆய்வு செய்வார்கள். தினமும் நிறைய பலூன்கள் அதுபோல பறக்கவிடுவார்கள். அதன்பிறகு திடீரென செயற்கைக்கோள்களை அனுப்பி வானிலை தரவுகளை தெரிந்துகொண்டார்கள். அப்போது எல்லாம் இஸ்ரோ செல்ல மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை.

ஒருவேளை நான் இஸ்ரோவுக்கு சென்றிருந்தால் என்னுடைய பைலட் கனவு நிஜமாகி இருக்கும். எங்களுக்கு கிடைக்காத வாய்ப்பு இப்போது மாணவர்களாகிய உங்களுக்கு கிடைத்துள்ளது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒவ்வொருவரையும் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு உங்கள் லட்சியத்தை அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News