உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வள்ளியூரில் வீடு புகுந்து பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

Published On 2022-06-02 15:50 IST   |   Update On 2022-06-02 15:50:00 IST
வள்ளியூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 8 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார்.
நெல்லை:

வள்ளியூர் அருகே உள்ள வடக்கு ஆச்சியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முப்புடாதி. இவரது மனைவி பிரேமா(வயது 35).

சம்பவத்தன்று ஆனைகுளத்தில் உள்ள முப்புடாதியின் உறவினர் வீட்டுக்கு கோவில் கொடைவிழாவில் பங்கேற்பதற்காக பிரேமா சென்றுள்ளார். அன்று இரவு கொடை விழா முடிந்து அனைவரும் தூங்க சென்றுள்ளனர்.

அப்போது காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு பிரேமா தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர், அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பிரேமாவின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்கநகையை பறிக்க முயன்றபோது விழித்துக்கொண்ட பிரேமா, நகையை பிடித்தார்.

ஆனால் அதில் சுமார் 6 கிராம் எடை கொண்ட செயின் துண்டு மட்டும் அவரது கையில் சிக்கியது. மற்றொரு பகுதி தங்க செயின் மர்ம நபரின் கையில் மாட்டிக்கொண்டது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இதுதொடர்பாக வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News