உள்ளூர் செய்திகள்

மணமேல்குடி கோடியக்கரை கடற்கரைக்கு இலங்கை பைபர் படகில் வந்த 3 பேர் கைது

Published On 2023-04-06 08:37 IST   |   Update On 2023-04-06 08:37:00 IST
  • படகு இலங்கை பதிவெண் கொண்ட பைபர் படகு என்பதும், அதிவேக என்ஜின் கொண்டதும் தெரியவந்தது.
  • 3 பேரையும் கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர்.

மணமேல்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் வெளிநாட்டு படகு ஒன்று மர்மமான முறையில் நிற்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அந்த படகு இலங்கை பதிவெண் கொண்ட பைபர் படகு என்பதும், அதிவேக என்ஜின் கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த படகில் வந்த மர்ம ஆசாமிகள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் பதிவு இல்லாமல் வசித்து வரும் சிந்துஜன் (வயது 28) என்பவர் இலங்கைக்கு சென்று அங்கிருந்து இலங்கை அலைதீவை சேர்ந்த விந்துசன் என்கின்ற துசன் (21), லிங்கேஸ்வரன் (25) ஆகியோரை பைபர் படகு மூலம் மணமேல்குடி கோடியக்கரைக்கு அழைத்து வந்து அங்கிருந்து பஸ் மூலம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டிக்கு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News