முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள மாநில அரசும் ஆதரவு: 22-ந்தேதி கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்
- கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயனை அவரது அலுவலகத்தில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பு கடிதத்தை வழங்கினார்கள்.
- சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தும் கூட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:
பாராளுமன்ற தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 22-ந்தேதி கூட்டி உள்ள தென்மாநில கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க ஏற்கனவே கர்நாடகா, தெலுங்கானா முதல்-மந்திரிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து இப்போது கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலைபாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. ஆகியோர் அடங்கிய குழு நேற்று கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயனை அவரது அலுவலகத்தில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பு கடிதத்தை வழங்கினார்கள்.
அதை பெற்றுக் கொண்ட பினராயி விஜயன் மத்திய அரசின் ஒருதலைபட்சமான தொகுதி மறுசீரமைப்பு முயற்சிக்கு எதிராக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தும் கூட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே கேரள மாநிலத்தில் இருந்தும் 22-ந்தேதி கூட்டத்தில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.