முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்
- முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
- கந்தசஷ்டி விழாவையொட்டி நடந்தது
அரியலூர்
அரியலூர் நகரில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து, ஆடு, யானை, குதிரை, ரிஷப, வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. சூரசம்ஹார விழாவையொட்டி தங்க கவசத்தில் பாலசுப்பிரமணியசுவமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, சக்தி சன்னதிக்கு சென்று வேலை பெற்ற முருகர் சூரனை வதம் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) திருக்கல்யாணமும், நாளை விடையாற்றி விழாவும் நடைபெறுகிறது.
உடையார்பாளையம் தெற்கு தட்டார தெருவில் பால முருகன் கோவில் உள்ளது. கந்தசஷ்டி மகா லட்ச்சார்ச்சனை விழாவையொட்டி கடந்த 25-ந் தேதி காப்புக்கட்டி அனுக்ஞை, விக்னேஸ்வரர்பூஜை, புண்ணியாவாஜனம், வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று ஆட்டுக்கிடா வாகனம், மூலவர் சிவ சுப்பிரமணியர் அலங்காரத்திலும், இரவு 7 மணியளவில் சூரசம்ஹாரம் நடந்தது. இன்று (திங்கட்கிழமை) திருக்கல்யாண உற்சவமும், சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது. 1-ந் தேதி தீர்த்த வாரி உற்சவம் வேலப்பன் செட்டி ஏரிக்கரையில் நடைபெறுகிறது.