அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
- குறைந்தபட்ச ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.
- ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் பணிகளை புறக்கணித்து அனல் மின் நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று காலை முதல் தொடங்கினர். இரவு தொடர்ந்த போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை உள்ளிட்ட அனல் மின் நிலையங்கள் மற்றும் மின்சார விநியோக பிரிவில் ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் 10 ஆண்டுகள் ஆன ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என கூறினர். ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் முன்பு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
குறைந்தபட்ச ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். மாதம் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வார விடுமுறையுடன் கூடிய ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். ரசீது வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் ஒப்பந்த ஊழியர்கள் தொடர் காத்திருப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் காரணமாக கோடைகாலத்தில் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.