இந்தியா

தங்கம் விலை குறையும்- பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

Published On 2025-02-01 08:15 IST   |   Update On 2025-02-01 08:15:00 IST
  • நாட்டின் ரெயில் கட்டமைப்பு விரிவாக்கம் 10 சதவீதம் குறைந்துள்ளது.
  • குழந்தைகளுக்கான ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. நடப்பு 2024-2025 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

உலக வங்கியின் பண்டங்கள் சந்தை கண்ணோட்ட அறிக்கைப்படி, நடப்பாண்டில் பண்டங்களின் விலை 5.1 சதவீதமும், அடுத்த ஆண்டு 1.7 சதவீதமும் குறையும்.

கச்சா எண்ணெய் விலை குறையும். ஆனால், இயற்கை எரிவாயு விலை அதிகரிக்கும். மதிப்புவாய்ந்த உலோகங்களை பொறுத்தவரை, தங்கம் விலை குறையும். ஆனால், வெள்ளி விலை அதிகரிக்கும். இரும்புத்தாது, துத்தநாகம் ஆகியவற்றின் விலை சரிவதால், கனிமங்களின் விலையும் குறையும்.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதியாண்டில் (2025-2026) 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம்வரை பொருளாதார வளர்ச்சி இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், வளர்ந்த நாடாக விரும்பும் இந்தியாவுக்கு இந்த வளர்ச்சி குறைவானதுதான்.

இந்தியாவின் உணவு பணவீக்கம் தொடர்ந்து உறுதியாக இருக்கிறது. எந்த பருவநிலையையும் தாங்கக்கூடிய பயிர்வகைகளை உற்பத்தி செய்வது அவசியம். நீண்டகால விலை நிலைத்தன்மையை உறுதி செய்ய பருப்புவகைகள், எண்ணெய் வித்துகள், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

சர்வதேச நிதியம் கூறியபடி, பணியாளர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈட்டும் லாபத்துக்கு வரி விதிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்தியாவை உற்பத்தியில் வலிமையானதாக மாற்ற அரசு, தனியார், கல்வியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்

நாட்டின் ரெயில் கட்டமைப்பு விரிவாக்கம் 10 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், பெட்டிகள், என்ஜின்கள் ஆகியவை உற்பத்தி அதிகரித்துள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியா 7 முதல் 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு திவால் சட்ட நடைமுறையை முன்னேற்றுவது முக்கியம். அர்த்தமற்ற மனுக்களை நிறுவனங்கள் தாக்கல் செய்வதை தடுக்க கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்.

அனைவருக்கும் சமமான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை எட்ட கிராமப்புறங்களிலும் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கான ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News