நாடு முழுவதும் களைகட்டிய ஹோலி கொண்டாட்டம் - வண்ணமயாக மாறிய தெருக்கள் - வீடியோ
- வாரணாசி, சம்பல் பகுதிகளில் ஹோலி கொண்டாட்டங்கள் கலைக்கட்டின.
- நாட்டு மக்களிடையே ஒற்றுமையின் நிறத்தை ஆழப்படுத்தட்டும்
வண்ணங்களின் திருவிழா என போற்றப்படும் ஹோலி பண்டிகை இன்று(மார்ச் 14) நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு முதல் டெல்லி வரை பலவேறு இடங்களில் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. டெல்லி முதல்வர் ரேகா குப்தா வண்ணங்களைப் பூசி கட்சியினருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் டெல்லியில் தத்தமது வீடுகளில் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான், மத்திய பிரதேச முதல்வர்களும் ஆதரவாளர்களுடன் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி, பிரயாக்ராஜ், சம்பல் பகுதிகளில் ஹோலி கொண்டாட்டங்கள் கலைக்கட்டின. திரளான மக்கள் வீதிகளில் திரண்டு ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை பூசி மகிழ்ந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், தமிழ்நாட்டில் திருச்சி ஆகிய பகுதிகளிலும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். பஞ்சாப், மேற்கு வங்கம், திரிபுரா எல்லைகளிலும் எல்லைப்பாதுகாப்பு படையினர் வண்ணங்களை பூசி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே ஹோலி பண்டிகைக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திரௌபதி முர்மு தனது எக்ஸ் பதிவில், வண்ணங்களின் பண்டிகையான ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த மகிழ்ச்சிப் பண்டிகை ஒற்றுமை, அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை அளிக்கிறது.
இந்த விழா இந்தியாவின் விலைமதிப்பற்ற கலாச்சார பாரம்பரியத்தையும் குறிக்கிறது. வாருங்கள், இந்த மங்களகரமான சந்தர்ப்பத்தில், பாரதத் தாயின் அனைத்து குழந்தைகளின் வாழ்க்கையிலும் தொடர்ச்சியான முன்னேற்றம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் வண்ணங்களைக் கொண்டுவர நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில், உங்கள் அனைவருக்கும் ஹோலி வாழ்த்துக்கள். மகிழ்ச்சியும், இன்பமும் நிறைந்த இந்தப் புனிதப் பண்டிகை, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும் சக்தியையும் ஊட்டுவதோடு, நாட்டு மக்களிடையே ஒற்றுமையின் நிறத்தை ஆழப்படுத்தட்டும் என்பது எங்கள் நம்பிக்கை என்று அதில் பதிவிட்டுள்ளார்