இந்தியா

யானைத்தந்தம் வைத்திருந்த வழக்கு: நடிகர் மோகன்லால் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

Published On 2023-08-18 09:48 IST   |   Update On 2023-08-18 09:48:00 IST
  • நடிகர் மோகன்லால் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறை வழக்குப்பதிவு செய்தது.
  • பெரும்பாவூர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சி தேவாரத்தில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் இருந்து கடந்த 2011-ம் ஆண்டு 4 யானை தந்தங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து நடிகர் மோகன்லால் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறை வழக்குப்பதிவு செய்தது.

மேலும் அவருக்கு எதிராக கடந்த 2019-ம் ஆண்டு வனத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் நடிகர் மோகன்லால் மட்டுமின்றி, மேலும் 3 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் மோகன்லால் மீதான வழக்கை வனத்துறை ரத்து செய்தது.

மேலும் யானை தந்தங்களை வைத்துக் கொள்ள மோகன்லாலுக்கு கேரள அரசு அனுமதி வழங்கியது. ஆனால் எர்ணாகுளத்தை சேர்ந்த பவுலோஸ் என்பவர், நடிகர் மோன்லாலுக்கு யானை தந்தங்கள் உரிமை சான்று வழங்கிய முதன்மை தலைமை பாதுகாவலரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

கிருஷ்ணகுமார் என்பவரிடம் யானை தந்தத்தை வாங்கியதாகவும், தந்தம் செட் வைத்திருப்பதற்கான சான்றிதழ் தன்னிடம் இருப்பதாகவும் கோர்ட்டில் நடிகர் மோகன்லால் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கை வாபஸ் பெறுமாறு அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் இந்த பிரச்சினையை பொதுநலனாக கருதிய ஐகோர்ட்டு, வழக்கை தொடர மாஜிஸ்திரேட்டு கோட்டுக்கு பரிந்துரைத்தது. அதன்படி பெரும்பாவூர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

நடிகர் மோகன்லால் மற்றும் வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் நவம்பர் 3-ந்தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று பெரும்பாவூர் மாஜிஸ்திரேட்டு கோர்டடு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News