null
நாளை முதல் அமலுக்கு வரும் FASTag புதிய விதிகள்.. 2 மடங்கு அபராதத்தை தவிர்க்க என்ன வழி?
- சுங்கச் சாவடியில் பணப்பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.
- சுங்க கட்டணத்தை விட 2 மடங்கு அபராதம் விதிக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கத் கட்டணம் செலுத்த 'பாஸ்டேக்' முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதன்படி, வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் பாஸ்டேக் விதிமுறைகளில் மத்திய அரசு அமைப்பான இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இவை நாளை(பிப்ரவரி 17) முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, வாகனங்கள் சுங்கச் சாவடியை அடைவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு பாஸ்டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தாலோ, ஹாட் லிஸ்டில் இருந்தாலோ, குறைந்த இருப்பைக் கொண்டிருந்தாலோ சுங்கச் சாவடியில் பணப்பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.
மேலும் ஸ்கேன் செய்யப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு பாஸ்டேக், ப்ளாக்லிஸ்ட் செய்யப்பட்டாலோ அல்லது செயலற்ற நிலையில் இருந்தாலோ பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.
பாஸ்டேக் இந்த இரண்டு நிபந்தனைகளையுமே பூர்த்தி செய்யவில்லை என்றால் "எரர் கோட் 176" உடன் பரிவர்த்தனை ரத்து செய்யப்படும். மேலும் அத்தைகைய வாகனத்திற்கு சுங்க கட்டணத்தை விட 2 மடங்கு அபராதம் விதிக்கப்படும்.
எனவே பயணங்களைத் தொடங்குவதற்கு முன்பே பாஸ்டேக்கில் போதிய பணயிருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
மேலும் பயனர் விவரங்களை அவ்வப்போது பதிவு செய்து அதனை உறுதி செய்துகொள்ள வேண்டும். சுங்கச்சாவடிகளை அடைவதற்கு முன்பு, பாஸ்டேக் நிலையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.