அடுத்த மாதம் இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி: புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது
- 2015-ல் இருந்து 4-வது முறையாக இலங்கை செல்ல இருக்கிறார்.
- இருநாடுளுக்கு இடையில் புதிய பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது.
இந்திய பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடக்கத்தில் இலங்கை செல்ல இருப்பதாக என இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அனுர குமார திசநாயகே இந்தியா வந்திருந்தார். அப்போது இந்திய பிரதமர் மோடி இலங்கை வருவது உறுதி செய்யப்பட்டது.
நாங்கள் அண்டை நாடான இந்தியாவுடன் நெருங்கிய நட்பை பேணி வருகிறோம். இந்தியாவுக்கான எங்களுடைய முதல் மூலோபாய சுற்றுப் பயணத்தின்போது இருநாட்டு ஒத்துழைப்பு தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்திய பிரதமர் மோடி இலங்கை வரும்போது, இருநாடுளுக்கு இடையில் புதிய பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது. தேசிய நலனை பேணும் விதமாக வெளிநாட்டு கொள்கையில் எந்தவொரு நாட்டிற்கும் ஆதரவாக இல்லாமல் தொடர்ந்து நடுநிலையாக செயல்படுவோம் என விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு இலங்கை மின்சார வாரியமும் இந்தியாவின் NTPC-யும் கிழக்கு திருகோணமலையின் சம்பூர் நகரில் 135 மெகாவாட் சூரிய மின் நிலையம் கட்ட ஒப்புக்கொண்டன. பிரதமர் மோடி பயணத்தின்போது இந்த சூரிய மின் நிலையம் திறந்து வைக்கப்பட இருக்கிறது.
பிரதமர் மோடி கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து 4-வது முறையாக இலங்கை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.