போலீஸ் நிலையத்தில் கைதியை சங்கிலியால் பிணைத்து வேலை வாங்கிய போலீசார்: வீடியோ வைரல்
- கைதிகள் உரிமைகள் மீறப்பட்டதாக கடுமையான குற்றசாட்டுகள்.
- சர்ச்சைக்கு போலீசார் இதுவரை பதில் அளிக்கவில்லை.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத், போதன் நகரை சேர்ந்த வாலிபர் மீது அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் குற்றம் சாட்டப்பட்ட நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபரை போலீஸ் நிலையத்தில் உள்ள அறையில் அடைக்க வேண்டும். அதற்கு பதிலாக போலீசார் அந்த நபரின் கை கால்களில் கனமான இரும்பு சங்கிலியால் பிணைத்தனர்.
பின்னர் அந்த வாலிபரிடம் போலீஸ் நிலையம் முழுவதையும் சுத்தப்படுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தினர். இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்ட வாலிபர் துடைப்பத்தை கையால் பிடித்துக் கொண்டு மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து போலீஸ் நிலையம் முழுவதையும் தூய்மைப்படுத்தினார்.
அப்போது போலீஸ் நிலையத்திற்கு வந்த ஒருவர் அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இந்த காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
கைதிகள் உரிமைகள் மீறப்பட்டதாக கடுமையான குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.
இது தெலுங்கானாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்கு போலீசார் இதுவரை பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.