கவர்னரின் 30 அடி உயர உருவ பொம்மையை எரித்த மாணவர் கூட்டமைப்பினர்
- ஓட்டல்கள், ரிசார்ட்டுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டின.
- கவர்னர் மற்றும் மாநில அரசுக்கு இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.
திருவனந்தபுரம்:
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் அனைத்து மாநிலங்களிலும் நேற்று இரவு களை கட்டியது. கேரள மாநிலத்திலும் பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலா கலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
கேரளாவில் கோவளம் மற்றும் கோழிக்கோடு கடற்கரைகளில் நள்ளிரவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆயரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் ஆடிப்பாடி புத்தாண்டை வரவேற்றனர். இதேபோன்று ஏராளமான ஓட்டல்கள், ரிசார்ட்டுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டின.
கண்ணூரில் உள்ள பையம்பலம் கடற்கரையிலும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அந்த கடற்கரையில் இநதிய மாணவர் கூட்டமைப்பு சார்பில் கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமதுகானின் 30 அடி உயர உருவபொம்மை வைக்கப்பட்டிருந்தது.
மிகவும் பிரம்மாண்டமாக இருந்த அந்த உருவ பொம்மையை, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தீவைத்து எரித்தனர். கேரளாவில் கவர்னர் மற்றும் மாநில அரசுக்கு இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனால் கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் இந்திய மாணவர் கூட்டமைப்பினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கவர்னரின் பிரம்மாண்ட உருவபொம்மை எரிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.