இந்தியா

வாயை மூடிக்கொண்டு உட்காரு.. பாராளுமன்றத்தில் பாஜக எம்.பி.யிடம் ஆவேசமாக பேசிய கார்கே

Published On 2025-02-05 14:42 IST   |   Update On 2025-02-05 14:42:00 IST
  • கார்கே, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு வீழ்ச்சியடைந்தது குறித்து பேசினார்.
  • கார்கே பேசி கொண்டிருக்கும்போது பாஜக எம்.பி. நீரஜ் சேகர் குறுக்கிட்டார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக பாராளுமன்றம் நேற்று கூடியது.

அப்போது மாநிலங்களவையில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்தது குறித்து பேசினார்.

கார்கே பேசி கொண்டிருக்கும்போது பாஜக எம்.பி. நீரஜ் சேகர் குறுக்கிட்டார். இதனால் கோபமடைந்த கார்கே,"நானும் உனது அப்பாவும் (சந்திர சேகர்) ஒரு காலத்தில் நல்ல நண்பர்களாக இருந்தோம். அப்போது உன்னை நான் ஒரு குழந்தையாக பார்த்தேன். இப்போது நீ என்ன பேசி கொண்டிருக்கிறாய். பேசாமல் அமைதியாக உட்காரு" என்று கோபத்துடன் பேசினார்.

அப்போது இருவரையும் சமாதானப்படுத்த முயன்ற அவை தலைவர் ஜெகதீப் தன்கர், "சந்திர சேகர் இந்நாட்டின் உயர்ந்த தலைவர்களில் ஒருவர். அவருக்கு நாம் மரியாதையை செலுத்த வேண்டும். ஆகவே முன்னாள் பிரதமர் சந்திர சேகர் குறித்த உங்களது கருத்துக்களை திரும்ப பெறுங்கள்" என்று வலியுறுத்தினார்.

அதற்கு பதில் அளித்த கார்கே, "நானும் சந்திர சேகரும் ஒருகாலத்தில் ஒன்றாக கைதானோம். அதனால் தான் அவரது அப்பாவை எனது தோழன் என்று குறிப்பிட்டேன். நான் யாரையும் இழிவுபடுத்த வேண்டுமென்று பேசவில்லை. பாஜக தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இழிவுபடுத்தினார்கள்." என்று தெரிவித்தார்.

சமாஜ்வாதி கட்சியில் இருந்த நீரஜ் சேகர் 2019 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். அவரது தந்தை சந்திர சேகர் 1990 அக்டோபர் முதல் 1991 ஜூன் வரை பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News