விளையாட்டு (Sports)
null

சாம்பியன்ஸ் டிராபி போட்டி: பிப்ரவரி 19-ந்தேதி தொடங்க ஐ.சி.சி. திட்டம்

Published On 2024-06-12 06:24 GMT   |   Update On 2024-06-12 08:14 GMT
  • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் பரிந்துரை செய்துள்ளது.
  • ஆய்வு செய்ய ஐ.சி.சி. அதிகாரிகள் பலர் பாகிஸ்தான் சென்றுள்ளனர்.

லாகூர்:

"மினி உலக கோப்பை" என அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி 1998-ம் ஆண்டு வங்காளதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் தென்ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 8 போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது.

கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது. 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை 8 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் முதல் தடவையாக 2025-ல் நடத்துகிறது.

ஒருநாள் போட்டித் தரவரிசையில் டாப் 8 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. வெஸ்ட்இண்டீஸ், இலங்கை ஆகியவை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை கராச்சி, லாகூர், ராவல் பிண்டியில் நடத்த திட்டமிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் பரிந்துரை செய்துள்ளது.

தொடக்க ஆட்டம், அரைஇறுதி உள்பட 3 போட்டிகள் கராச்சியிலும், இறுதிப்போட்டி உள்பட 7ஆட்டங்கள் லாகூரிலும், அரைஇறுதி உள்பட 5 போட்டிகள், ராவல் பிண்டியிலும் நடத்த முடிவு செய்துள்ளது.

1996 உலக கோப்பைக்கு பிறகு முதல் ஐ.சி.சி. போட்டியை பாகிஸ்தானில் நடைபெறுவதால் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய ஐ.சி.சி. அதிகாரிகள் பலர் பாகிஸ்தான் சென்றுள்ளனர்

இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்பது உறுதியில்லை. மத்திய அரசின் அனுமதியை பொறுத்துதான் இருக்கிறது.

இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை லாகூரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா பங்கேற்க மறுத்தால் கடந்ந காலங்களை போல இந்தியா ஆடும் போட்டிகள் வேறு நாட்டுக்கு மாற்றப்படும். 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News