டி காக் அதிரடி: ராஜஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது கொல்கத்தா
- முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 151 ரன்கள் எடுத்தது.
- டி காக் அதிரடியில் கொல்கத்தா 153 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
கவுகாத்தி:
ஐ.பி.எல். 2025 சீசனின் 6-வது போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் டைரஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.
துருவ் ஜுரேல் 28 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 29 ரன்னும், ரியான் பராக் 25 ரன்னும், சஞ்சு சாம்சன் 13 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கொல்கத்தா அணி சார்பில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, மொயீன் அலி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மொயீன் அலி 5 ரன்னிலும், கேப்டன் ரகானே 18 ரன்னிலும் அவுட்டாகினர்.
3வது விக்கெட்டுக்கு டி காக், ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தது. டி காக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்து வென்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டி காக் 97 ரன்னும், ரகுவன்ஷி 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
ராஜஸ்தான் அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.