அணியின் செயல்திறன் என்பது ஒரு வீரரை பொறுத்தது அல்ல- பும்ரா விலகல் குறித்து கபில் தேவ் கருத்து
- பும்ரா தற்போது முழு உடற்தகுதி இல்லாமல் இருப்பது பின்னடைவாக இருந்தாலும் நம்மிடம் சிறந்த அணி உள்ளது.
- வெற்றி தோல்வி பற்றி யோசிக்காமல், சிறப்பாக செயல்பட்டு முன்னோக்கி செல்வதில் கவனம் செலுத்துங்கள்.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்த தொடரில் காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் அவர் இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சு துறையும் பலவீனமாக உள்ளதுடன், அணியின் வெற்றி வாய்ப்பையும் அது பாதித்துள்ளதாக முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அணியின் செயல்திறன் என்பது ஒரு வீரரை மட்டும் பொறுத்தது அல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அணியின் செயல்திறன் என்பது ஒரு வீரரை மட்டும் பொறுத்தது அல்ல. அது ஒட்டுமொத்த அணியையும் சார்ந்தது. ஆனால் பும்ரா தற்போது முழு உடற்தகுதி இல்லாமல் இருப்பது பின்னடைவாக இருந்தாலும் நம்மிடம் சிறந்த அணி உள்ளது.
அதனால் வெற்றி தோல்வி பற்றி யோசிக்காமல், சிறப்பாக செயல்பட்டு முன்னோக்கி செல்வதில் கவனம் செலுத்துங்கள். இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
என்று தெரிவித்துள்ளார்.