சாம்பியன்ஸ் டிராபி: 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 315 ரன்கள் குவித்தது.
- சிறப்பாக ஆடிய ரியான் ரிக்கல்டன் சதமடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கராச்சி:
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கராச்சியில் இன்று நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ரிக்கல்டன் சதமடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் பவுமா 58 ரன்னும், வேன் டெர் டூசென் 52 ரன்னும், எய்டன் மார்க்ரம் 52 ரன்னும் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது நபி 2 விக்கெட்டும், ஃபரூக்கி, ஹஷ்மதுல்லா ஒமர்சாய், நூர் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
ரஹ்மத் ஷா கடைசி வரை போராடினார். அரை சதம் கடந்த அவர் 90 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் 43.3 ஓவரில் 208 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், நிகிடி, முல்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.