5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் நாளை தொடக்கம்
- மகளிர் பிரீமியர் லீக் போட்டி நாளை தொடங்கி மார்ச் 15-ந்தேதி வரை நடக்கிறது.
- 13-ந்தேதி எலிமினேட்டர் ஆட்டமும், மார்ச் 15-ந்தேதி இறுதிப் போட்டியும் நடக்கிறது.
வதோதரா:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டியை 2023-ல் அறிமுகப்படுத்தியது. முதல் சீசனில் மும்பை இந்தியன்சும், 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.
3-வது மகளிர் பிரீமியர் லீக் போட்டி நாளை (14-ந் தேதி) தொடங்குகிறது. மார்ச் 15-ந்தேதி வரை இந்தப் போட்டிகள் வதோதரா, பெங்களூரு, லக்னோ, மும்பை, ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது.
இதில் நடப்பு சாம்பியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி.வாரியாஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாடும். 2-வது, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரில் மோதும். 11-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. 13-ந்தேதி எலிமினேட்டர் ஆட்டமும், மார்ச் 15-ந்தேதி இறுதிப் போட்டியும் நடக்கிறது.
வதோதராவில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு-குஜராத் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.