நடுரோட்டில் பொறுமையை இழந்த ராகுல் டிராவிட் - ஆட்டோ ஒட்டுநருடன் வாக்குவாதம்
- விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
- விபத்து குறித்து எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சாலையில் ஆட்டோ ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு கன்னிங்ஹாம் சாலையில் நேற்று மாலை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து நின்று கொண்டிருந்த ராகுல் டிராவிட் பயணித்த கார் மீது சரக்கு ஆட்டோ ஒன்று மோதியது. இதையடுத்து காரில் இருந்து இறங்கிய டிராவிட் ஆட்டோ ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து ஆட்டோ ஓட்டுநரின் தொலைபேசி எண் மற்றும் ஆட்டோ எண்ணை டிராவிட் பதிவு செய்துக்கொண்டார். சிறிது நேரம் வாக்குவாதம் செய்துவிட்டு டிராவிட் அங்கிருந்து புறப்பட்டார். இதனை அங்கிருந்தவர்களில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. டிராவிட் தனது காரை ஓட்டிச் சென்றாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பொறுமையின் சிகரமாக அறியப்படும் ராகுல் டிராவிட் சாலையில் வாக்குவாதம் செய்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.