தமிழ்நாடு (Tamil Nadu)

கள்ளக்குறிச்சி விவகாரம்... கோகுல்தாஸ் ஆணையம் விசாரணையை தொடங்குகிறது

Published On 2024-06-21 06:10 GMT   |   Update On 2024-06-21 06:10 GMT
  • ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும் என தெரிவித்து இருந்தார்.
  • கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்து விசாரணை நடத்த உள்ளார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டு இருந்தார். மேலும் இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், எஸ்பி, வருவாய் அலுவலர் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதன்பின், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்து விசாரணை நடத்த உள்ளார். மேலும் கருணாபுரம் பகுதிக்கும் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளார்.

Tags:    

Similar News