திடீர் மழை.. மாறிய கிளைமேட்.. குளு குளுவான சென்னை
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
- திடீர் மேகமூட்டம் மற்றும் மழை காரணமாக நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, மீனம்பாக்கம், ஆலந்தூர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. திடீர் மேகமூட்டம் மற்றும் மழை காரணமாக நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் மழையால் நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
இதுதவிர சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.