தமிழ்நாடு (Tamil Nadu)

விக்கிரவாண்டி வாக்காளர்கள் தி.மு.க.விற்கு பாடம் புகட்டுவார்கள்- எச்.ராஜா பேட்டி

Published On 2024-07-07 06:18 GMT   |   Update On 2024-07-07 06:18 GMT
  • தமிழகத்தில் போதைப்பொருள் பரவலாக அதிகரித்து உள்ளது.
  • தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்று கட்சியாக பா.ஜ.க. உள்ளது.

கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் எச்.ராஜா இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் மாடுகள் உள்ளன. இவைகள் சரியான முறையில் பராமரிப்பு இல்லாததால், கோவிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் இடத்தில் கோசாலை அமைத்து பசுக்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இதனை தவறும் பட்சத்தில் கோவிலை விட்டு அதிகாரிகள் வெளியேற வேண்டும் என்பதனை வலியுறுத்தி மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் 2000 கோவில்கள் சிதிலமடைந்து உள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டு உள்ளது. தேவாலயமோ அல்லது மசூதியோ இது போன்று சிதிலமடைந்து உள்ளது என தெரிவிக்க முடியுமா? ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் மக்கள் அளிக்கும் கோவில் பணத்தை சுரண்டுகின்றனர்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிப்பு மற்றும் விஷ சாராய சாவு நிறைந்த மாநிலமாக உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் இறப்பு தொடர்பாக உளவுத்துறைக்கு தகவல் தெரியும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் ஏன் சரியான முறையில் பாதுகாப்பு வழங்கவில்லை?. மேலும் சேலத்தில் திமுக கவுன்சிலரின் கணவர் அ.தி.மு.க. நிர்வாகியை கொலை செய்து உள்ளார்.

தமிழகத்தில் போதைப்பொருள் பரவலாக அதிகரித்து உள்ளது. இதனை கண்டித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவாரா? ஆகையால் இவர்களின் நாடகம் மக்களுக்கு தெரிந்து வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் முழுமையாக இவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.

கடலூரில் தற்போது பா.ம.க. நிர்வாகி ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்ய முயன்று உள்ளனர். தமிழகத்தில் காவல்துறை கட்டுப்பாட்டில் இல்லை. தமிழக முழுவதும் கூலிப்படை சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். இதனை பார்க்கும் போது முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. மேலும் அவரது கட்டுப்பாட்டில் அரசு மற்றும் கட்சி இல்லை என்பது தெரிய வருகின்றது.

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்று கட்சியாக பா.ஜ.க. உள்ளது. விக்கிரவாண்டி தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் கண்டிப்பாக பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பா,ஜ.க. மாநகர தலைவர் வேலு வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News