தமிழ்நாடு

தக்கலை அருகே மகனை கொன்று தம்பதியர் தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்கள்-கடிதம் சிக்கியது

Published On 2023-07-23 12:15 IST   |   Update On 2023-07-23 12:15:00 IST
  • பேரன் ஜீவா முகத்தில் பாலி்தீன் கவர்கள் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் பிணமாக கிடந்து உள்ளான்.
  • போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், மகனை கொன்று விட்டு தம்பதியர் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

தக்கலை:

கன்னியாகுமரி மாவட்டம் முகிலன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளி தரன் (வயது 40). எம்.இ., பி.எல். பட்டதாரி. இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

இவருக்கும், தக்கலை மணலி பகுதியை சேர்ந்த சைலஜா என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது.இவர்களது மகன் ஜீவா (7)

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்தமாக புதிய வீடு கட்டி இவர்கள் குடியேறினர். முரளிதரனும் ஐ.டி. கம்பெனி வேலையை விட்டு விட்டு நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் நேற்று இவர்களது வீட்டுக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்பட வில்லை. இதையடுத்து அங்கு வந்த சைலஜாவின் தந்தை கோபால், மகளை கூப்பிட்டு பார்த்தார். ஆனாலும் கதவு திறக்காத நிலையில் சந்தேகமடைந்த அவர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, முரளிதரன் வீட்டின் ஹாலில் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையிலும், சைலஜா மற்றொரு அறையில் தூக்கிட்ட நிலையிலும் காணப்பட்டனர்.

பேரன் ஜீவா முகத்தில் பாலி்தீன் கவர்கள் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் பிணமாக கிடந்து உள்ளான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கோபால், தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், மகனை கொன்று விட்டு தம்பதியர் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்கொலை செய்து கொண்ட முரளிதரன் எம்.இ., பி.எல். முடித்து பெங்களூரில் ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வந்தார். திருமணத்துக்கு பிறகு மனைவி சைலஜாவுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 6 வருடங்களாக குழந்தை இல்லாத நிலை இருந்தது. அதன்பிறகு மகன் பிறந்தான். அவனுக்கு ஜீவா என்று பெயரிட்டு பாசத்துடன் வளர்த்து உள்ளனர்.

முதலில் ஆரோக்கியமாக இருந்த குழந்தை ஜீவா பின்னர் மெல்ல மெல்ல ஆட்டிசம் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நோய்க்கு மருத்துவம் பார்த்து வந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் வேலை இழந்த முரளிதரன் மனைவியின் சொந்த ஊரான தக்கலைக்கு குடி பெயர்ந்து உள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் சொந்தமாக புதிய வீடு கட்டி குடியேறிய முரளிதரன்-சைலஜா தம்பதியருக்கு மகன் ஆட்டிசம் குறைபாடு நோயால் பாதிப்படைந்தது மன வேதனையை ஏற்படுத்தியது. பணம் இருந்தும் மகனின் நோயை தீர்க்க முடியாத அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

இந்த நிலையில் தான் மனமுடைந்த அவர்கள் முதலில் மகன் ஜீவாவிற்கு அவரது நோய்க்காக மருத்துவர்களால் வழங்கப்பட்ட டானிக் மருந்தை அதிக அளவில் கொடுத்து மயக்கமடைய செய்துள்ளனர். பின்னர் அவனது முகத்தை பாலித்தீன் கவரால் கட்டி கட்டிலில் போட்டு விட்டு முரளிதரன் வீட்டின் ஹாலில் மின் விசிறியிலும், சைலஜா மகன் கட்டிலில் கிடந்த அந்த அறையிலும் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து உள்ளனர். வீட்டில் இருந்து ஒரு கடிதம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

அதில் பல லட்சம் ரூபாய் செலவழித்தும் தவமாய் பெற்ற மகனின் நோயை குணப்படுத்த முடியாததால் மனவேதனையில் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தற்கொலை செய்த 3 பேரின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.

Tags:    

Similar News