தமிழ்நாடு
பிளஸ்-1 பொதுத்தேர்விலும் 11 ஆயிரம் பேர் 'ஆப்சென்ட்'
- 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் தேர்வு எழுத இருப்பதாக அரசுத் தேர்வுத்துறை தெரிவித்து இருந்தது.
- வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) பிளஸ்-1 வகுப்புக்கான ஆங்கிலம் பாடத் தேர்வு நடைபெற உள்ளது.
சென்னை:
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இதில் தமிழ் தேர்வை 11 ஆயிரத்து 430 பேர் எழுதவில்லை (ஆப்சென்ட்). இதற்கிடையே பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.
இந்த தேர்வை பள்ளி மாணவர்களாக 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 பேரும், பள்ளி மாணவிகளாக 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 பேரும், தனித்தேர்வர்களாக 4 ஆயிரத்து 755 பேரும், சிறைவாசி தேர்வர்களாக 137 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் எழுத இருப்பதாக அரசுத் தேர்வுத்துறை தெரிவித்து இருந்தது.
முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடந்தது. இந்த தேர்வை 11 ஆயிரத்து 90 பள்ளி மாணவ-மாணவிகள் எழுதவில்லை (ஆப்சென்ட்) என தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது.
இதனைத் தொடர்ந்து வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) பிளஸ்-1 வகுப்புக்கான ஆங்கிலம் பாடத் தேர்வு நடைபெற உள்ளது.