வார இறுதி நாட்களை முன்னிட்டு 677 சிறப்பு பஸ்கள் இயக்கம்
- சென்னையில் இருந்து இதர இடங்களுக்கு தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- மாதவரத்தில் இருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 20 பஸ்கள் என ஆக மொத்தம் 677 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 8, 9) சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்து தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (7-ந்தேதி) 265 பஸ்களும், சனிக்கிழமை (8-ந் தேதி) 270 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுபோல, கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 51 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாதவரத்தில் இருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 20 பஸ்கள் என ஆக மொத்தம் 677 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
இதுமட்டுமன்றி, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.