தமிழ்நாடு

சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வரும் 128 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி

Published On 2025-03-08 20:45 IST   |   Update On 2025-03-08 20:46:00 IST
  • பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான உயர்மட்ட வழித்தடம் அமைக்கும் பணிகள் முடிவடைந்தன.
  • வழித்தடம் 4-ன் உயர்த்தப்பட்ட மேம்பால கட்டுமானத்தை வேகமாக நிறைவு செய்யும் நடவடிக்கையை ஊக்குவிக்கிறது.

சென்னையில் 128 மெட்ரோ நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சிஎம்ஆர்எல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடந்து, மெட்ரோ ரெயில் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இரண்டாம் கட்டத்தில் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் மூன்று வழித்தடங்களில் 128 மெட்ரோ நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் போரூர் சந்திப்புக்கு இடையிலான 624-வது மற்றும் இறுதி யு-கர்டரின் கட்டுமானப் பணிகள் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தன, இதன் மூலம் வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான உயர்மட்ட வழித்தடம் அமைக்கும் பணிகள் முடிவடைந்தன.

இந்த இறுதி யு-கர்டர் குமணஞ்சாவடி நிலையத்தில் உள்ள SP-04-05 தூண்களுக்கு இடையே இன்று அதிகாலை 3:30 மணி முதல் 5:30 மணி வரை போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வெற்றிகரமாக நிறுவப்பட்டது.

இந்த முக்கியமான நிகழ்வு சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்திருந்ததால் மேலும் சிறப்பாக அமைந்தது. மேலும் இத்திட்டத்தின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றிய பல்வேறு பெண் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கவுரவிக்கப்பட்டனர் மற்றும் அவர்களின் அர்ப்பணிப்புக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்த சாதனையின் மூலம், தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் இதுவரை மொத்தம் 3,202 முன்கூட்டிய தயாரிக்கப்பட்ட கான்கிரீட் உத்திரங்கள் (precast concrete elements) மற்றும் 2 திறந்த வலை உத்திரங்கள் (Open Web Girders), உட்பட 164 இரும்பு விட்டங்கள் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளன.

இந்த மைல்கல், பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை தடையற்ற இணைப்பை மேம்படுத்தும் வகையில், வழித்தடம் 4-ன் உயர்த்தப்பட்ட மேம்பால கட்டுமானத்தை வேகமாக நிறைவு செய்யும் நடவடிக்கையை ஊக்குவிக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News