தமிழ்நாடு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 'திடீர்' தீ விபத்து: 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

Published On 2025-03-16 10:21 IST   |   Update On 2025-03-16 10:21:00 IST
  • பல்வேறு பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
  • பல ஆயிரக்கணக்கானோர் மறைமுகமாக பணி செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் துறைமுகத்தையொட்டி அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த அனல் மின் நிலையத்தில் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி நடைபெறுகிறது.

இங்கு 210 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளது. இதன் மொத்த உற்பத்தித்திறன் 1050 மெகாவாட் ஆகும். இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் அனல்மின் நிலையத்தில் திடீரென புகை மூட்டம் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் தீ விபத்தாக மாறி முதல் மற்றும் இரண்டு அலகுகளில் தீ எரியத்தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 3-வது அலகுக்கும் தீ பரவும் சூழல் ஏற்பட்டது. இதனால் உடனடியாக 1,2,3 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

தீ விபத்து குறித்த தகவலை தொடர்ந்து சிப்காட், ஸ்பிக் தொழிற்சாலை, என்.டி.பி. எல்., தூத்துக்குடி புறநகர் பகுதிகள் மற்றும் ஏரல் உட்பட 12-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கோடை காலத்தில் மின் தேவை அதிகமாக இருக்கும் சூழலில், அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையத்தில் நிரந்தர தொழிலாளர்களாக 1,550 பேரும், ஒப்பந்த அடிப்படையில் 1,270 தொழிலாளர்களும் பணி செய்து வருகின்றனர்.

இதுபோக பல ஆயிரக்கணக்கானோர் மறைமுகமாக பணி செய்து வருகின்றனர். கப்பலில் வரும் நிலக்கரியை துண்டுகளாக நொறுக்கப்பட்டு சிறு துண்டுகள் நிலக்கரி அரவை எந்திரங்களில் செலுத்தப்பட்டு தூளாக்கப்படுகிறது.

தூளாக்கப்பட்ட நிலக்கரி பொடியாக்கி செலுத்தி விசிறிகள் மூலமாக உலைக்குள் வேகமாகச் செலுத்தி எரிக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அந்த அலகுகளில் தான் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News