தமிழ்நாடு

டாஸ்மாக்கில் கள்ளச்சாராயம்: தி.மு.க. என்றால் கொம்பு முளைத்தவர்களா?- இபிஸ் கண்டனம்

Published On 2025-02-05 09:35 IST   |   Update On 2025-02-05 09:37:00 IST
  • கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளதற்கு ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு வெட்கப்பட வேண்டும்.
  • தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்தோ இந்த ஸ்டாலின் மாடல் அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா?

"போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம்" என்று கள்ளச்சாராயம் விற்பவன் தைரியமாக சொல்லும் அளவிற்கு கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளதற்கு ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு வெட்கப்பட வேண்டும்.

போதாக்குறைக்கு, "தி.மு.க. கட்சிக்காரன்" எனும் அடையாளம் வேறு. தி.மு.க. என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? அவர்கள் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா?

தமிழ்நாட்டில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது, உங்கள் கட்சி அடையாளத்தை லைசன்சாக பயன்படுத்தி, சகல குற்றங்களையும் தி.மு.க.வினர் செய்வதற்கு தானா மு.க.ஸ்டாலின் அவர்களே?

உடனடியாக இந்த கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்வதோடு, எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி அனைவர் மீதும் சட்ட நடவடிக்கையை உறுதிசெய்யவேண்டுமென ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News