தமிழ்நாடு

கோழைத்தனம் என்று முதலமைச்சர் பற்றி விமர்சனம்- அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் சேகர்பாபு காட்டமான பதில்

Published On 2025-02-24 13:14 IST   |   Update On 2025-02-24 13:14:00 IST
  • சிறந்த பேச்சாளர்கள், கலைஞர்களை வைத்து இந்த முறை மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது.
  • அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். நேற்று கும்பகோணத்தில் நடந்த மாநாட்டில் பேசிய அன்புமணி ராமதாஸ், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமையில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார். இது கோழைத்தனம் என்று விமர்சித்தார்.

இந்த நிலையில் சென்னை அயனாவரம் பகுதியில் அன்னம் தரும் அமுதக் கரங்கள் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபுவிடம் இதுபற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என முதலமைச்சர் கூறுவது கோழைத்தனம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசி உள்ளார்.

வழக்கிற்கு பயந்து, மத்திய அரசுக்கு மண்டியிடுவது கோழையா அல்லது மாநில உரிமைக்காக நெஞ்சை நிமிர்த்தி உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தோடும், மத்திய அரசு முறையாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய அனைத்து வகையான சிறப்புகளையும் இடைமறைத்து தமிழகத்தின் வளர்ச்சியை குறைக்கின்ற போதும் நெஞ்சை நிமிர்த்தி மத்திய அரசுக்கு சவால் விடுகிற முதலமைச்சரை கோழை எனக்கூறுபவர்கள் கோழை என்ற கூற்றுக்கு அர்த்தம் தெரியாத நபர்களாக தான் இருக்க முடியும்.

எந்த நிலையிலும் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் போற்றப்பட்டது உண்டு. மத்திய அரசிடம் மாநில உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய இரும்பு மனிதராக மத்தியிலே இருக்கக்கூடிய ஒரு முதன்மையான முதலமைச்சர்தான் எங்கள் முதலமைச்சர் என அன்புமணி ராமதாசுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன் என்றார்.

மேலும் அவர் கூறும் போது, மகா சிவராத்திரிக்கான முன் ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்து சிவனைப் போற்றி வழிபடக்கூடிய நல்ல சூழலை உருவாக்கி இருக்கிறோம்.

இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், சிவபெருமானின் பெருமையை எடுத்துக் கூறுவது போன்ற பட்டிமன்ற பேச்சாளர்கள், சிறந்த பேச்சாளர்கள், கலைஞர்களை வைத்து இந்த முறை மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது. அனைத்து இடங்களிலும் சிறப்பாக வடிவமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

மயிலாப்பூரில் நானும், எம்.பி. ஜெகத்ரட்சகன், மேயர் பிரியா மற்றும் அந்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் மயிலை தா.வேலு உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளோம்.

கூடுகின்ற பக்தர்களுக்கு தேவையான சொற்பொழிவுகள் நடத்துவதும் சேர்கின்ற பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து, மருத்துவம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News