நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் தனது சேவையை தொடங்கியது.
- வருகிற 15-ந்தேதி வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறை முகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால் வடகிழக்கு பருவமழை மற்றும் பல்வேறு காரணங்களால் அதே மாதம் 23-ந்தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர், 'சுபம்' என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்தது. தொடர்ந்து, கடந்த ஆண்டு (2024) ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் தனது சேவையை தொடங்கியது.
இந்த கப்பல் வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்பட்டு வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கப்பல் போக்குவரத்து இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன்படி, இனி செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்களும் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இன்று இயக்கப்பட இருந்த கப்பல் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிக்கப்படும் என கப்பல் நிறுவனம் அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக வருகிற 15-ந்தேதி வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு கப்பலில் பயணிக்கலாம் என உற்சாகத்துடன் காத்திருந்த பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.