மத்திய அரசால் சிறந்த போலீஸ் நிலையமாக முத்துப்பேட்டை போலீஸ் நிலையம் தேர்வு
- இதற்கான பாராட்டு சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது.
- சான்றிதழை முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோரிடம் வழங்கினார்.
முத்துப்பேட்டை:
இந்தியாவிலேயே சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு மத்திய மண்டல ஐ.ஜி. ஜோசி நிர்மல் குமார் சான்றிதழ் வழங்கினார்.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கடந்த 2024-ம் ஆண்டிற்கான இந்தியாவில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களின் பணிகளையும் ஆராய்ந்து போலீஸ் நிலையங்களின் வருடாந்திர தர வரிசையில் சிறந்த போலீஸ் நிலையமாக தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தை மத்திய அரசு தேர்வு செய்யப்பட்டு அங்கீகரித்துள்ளது.
இதற்கான பாராட்டு சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது. இதனையொட்டி முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜோசி நிர்மல் குமார், அதற்கான சான்றிதழை முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோரிடம் வழங்கினார்.
அப்போது தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிலிப் பிராங்களின் கென்னடி மற்றும் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜோசி நிர்மல் குமார் கூறுகையில்:-
இன்றியமையாத காவல் துறை பணியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அனைத்தையும் முறையாக கையாண்டு, சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் காவல் துறையின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பையும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சேவைக்கான அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத முயற்சிகளுக்கும் நான் மனதார பாராட்டுகிறேன் என்றார்.